லூலு குழுமம் ஏற்கனவே இந்தியாவில் 4 மால்களை திறந்து உள்ள நிலையில் தற்போது லக்னோவில் ஐந்தாவது மால் ஒன்றை திறந்துள்ளது.
உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இந்த மாலை திறந்து வைத்து பார்வையிட்டார்.
உள்ளே நுழைந்தால் சொர்க்கம் போல் இருக்கும் இந்த மாலில் ஏராளமான பொதுமக்கள் வந்து வர்த்தகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லூலு மால்
லூலு குழுமத்தின் மால் உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கடந்த ஞாயிறு அன்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ரூ.2,000 கோடி முதலீட்டில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ள இந்த மால் லக்னோ கோல்ஃப் சிட்டியில் அமர் ஷஹீத் பாதையில் அமைந்துள்ளது. இந்த மால் நேற்று முதல் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் யோகி
லக்னோவில் லூலு மாலை திறந்து வைத்த முதல்வர் யோகி ஆதித்யநாத், இது உத்தரபிரதேச மக்களுக்கு மட்டுமல்ல சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு முக்கிய இடமாக இருக்கும் என்று கூறினார். இந்த மால் காரணமாக லக்னோவை சுற்றியுள்ள பிரயாக்ராஜ், வாரணாசி, கோரக்பூர் மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் லூலு நிறுவனத்தின் முயற்சிகளுக்கு தனது பாராட்டுகள் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது மால்
ஏற்கனவே இந்தியாவில் பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர் ஆகிய நான்கு நகரங்களில் லூலு மால் நிறுவப்பட்டுள்ள நிலையில் தற்போது உத்தரபிரதேசத்தில் ஐந்தாவது மால் திறக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கவிழா
இந்த மால் தொடக்க விழாவில் மாநில சட்டசபை சபாநாயகர் சதீஷ் மஹானா, துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக், உத்தரபிரதேச தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி மேம்பாடு, என்ஆர்ஐ மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர் நந்த கோபால் குப்தா 'நந்தி', தலைமை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா மற்றும் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
லூலு குழுமம் தலைவர்
லுலு குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநர் யூசுப் அலி எம்.ஏ., அதன் நிர்வாக இயக்குநர் அஷ்ரஃப் அலி எம்.ஏ., குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சைஃபி ருபாவாலா, லூலு இந்தியா சிஓஓ ரெஜித் ராதாகிருஷ்ணன் மற்றும் லுலு லக்னோவின் பிராந்திய இயக்குநர் ஜெயகுமார் கங்காதரன் ஆகியோர்களும் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முதல்வருக்கு விளக்கம்
திறப்பு விழாவுக்குப் பிறகு, முதலமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு மால் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்டை சுற்றி காட்டிய லுலு குழுமத்தின் தலைவர், பல்வேறு பிரிவுகள், அம்சங்கள் மற்றும் வசதிகள் குறித்து விளக்கினார்.
யூசுப் அலி
இந்த தொடக்க விழாவில் பேசிய யூசுப் அலி எம்.ஏ, "எங்கள் கனவுத் திட்டத்தை உத்தரபிரதேச மக்களுக்காக லக்னோவில் திறந்து வைப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அதன் முதன்மையான லுலு ஹைப்பர்மார்க்கெட் மற்றும் பொழுதுபோக்கு மண்டலமான ஃபுன்டுராவுடன், லுலு மால் லக்னோ நகரத்திற்கு உலகத் தரம் வாய்ந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும். உ.பி அரசின் ஒத்துழைப்புக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
வேலைவாய்ப்பு
இந்த மால் 15,000க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை வழங்கும் என்றும், வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் கிரேட்டர் நொய்டாவில் எங்கள் வரவிருக்கும் திட்டங்கள் முடிந்ததும், உள்ளூர் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், இந்த மெகா திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க உறுதுணையாக இருந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கும் உ.பி.அரசுக்கு நன்றி எனவும் லூலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலி தெரிவித்தார்.
22 லட்சம் சதுர அடி
உலக அளவில் இது லூலு குழுமத்தின் 235வது மால் ஆகும். 22 லட்சம் சதுர அடியில் பரந்து விரிந்து இந்த மெகா மால் காணப்படுகிறது. இந்த மாலில் 15 சிறந்த உணவகங்கள் உள்ளன. மேலும் 25 பிராண்ட் விற்பனை நிலையங்களைக் கொண்ட ஒரு மெகா ஃபுட் கோர்ட்டில் 1,600 பேர் அமரும் வசதி உள்ளது. சிறந்த நகைகள், ஃபேஷன் மற்றும் பிரீமியம் வாட்ச் பிராண்டுகளுடன் பிரத்யேக திருமண ஷாப்பிங் அரங்கமும் உள்ளது.
11 மாடி பார்க்கிங் வசதி
இந்த மாலில் 3,000 வாகனங்களுக்கு பிரத்யேக 11 மாடி பார்க்கிங் வசதி 7 லட்சம் சதுர அடியில் உள்ளது. 11 திரை கொண்ட பிவிஆர் திரையரங்குகள் இந்த ஆண்டின் இறுதியில் இந்த மாலில் அறிமுகப்படுத்தப்படும். மிகப்பெரிய குடும்ப பொழுதுபோக்கு வசதிகளில் ஒன்றான Funtura உடன், ஆறு வயது முதல் 66 வயதுடையவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களை இந்த மால் கொண்டுள்ளது.