மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தை பாருங்கள் என பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அவர்களுக்கு லைகா நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்னதாக 'பொன்னியின் செல்வன்' படம் குறித்தும், சோழ சாம்ராஜ்யம் குறித்தும் தனது ட்விட்டரில் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.
மேலும் தஞ்சை பெரியகோவில் குறித்த பெருமைகளை குறிப்பிடும் வீடியோ ஒன்றையும் அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சோழ சாம்ராஜ்யம்
சோழ சாம்ராஜ்யத்தின் பெருமைகளையும் ராஜராஜ சோழனின் மகிமைகளையும் தனது கற்பனையும் கலந்து அமரர் கல்கி எழுதிய நாவல்தான் 'பொன்னியின் செல்வன்' என்பதும் இந்த நாவல் தற்போது மணிரத்னம் கைவண்ணத்தில் திரைப்படமாக உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன்
இந்த படத்தின் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தஞ்சை பெரிய கோயில் குறித்த பெருமைகளை கூறும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தஞ்சை பெரிய கோவில்
அந்த வீடியோவில் ஸ்வரண்யா என்பவர் தஞ்சை பெரிய கோவிலுக்கு நேரடியாக சென்று அதன் சிறப்பு குறித்து விளக்குகிறார். பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்தது என்றும் எந்தவித இயந்திரமும் இல்லாத ஆயிரம் வருடத்திற்கு முன்பு இந்த கோயிலை சோழர்கள் கட்டி உள்ளார்கள் என்றும் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாய்வு தளம் அமைத்து கோவில் கோபுரத்தைக் கட்டினார்கள் என்றும் விளக்கியுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா
இந்த வீடியோ குறித்து ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில், ' திறமையான வடிவமைப்பாளர்கள் உருவாக்கிய அற்புதமான கோவில் தஞ்சை பெரிய கோவில் என்றும் சோழப்பேரரசு எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நாம் உண்மையில் உணரவில்லை என்றும் அதன் வரலாற்று முக்கியத்துவம் குறித்து உலகிற்கு உரக்க சொல்ல தவறிவிட்டோம்' என்றும் பதிவு செய்துள்ளார்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்
மேலும் இன்னொரு பதிவில் 'பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பற்றியே அதிகமாக கல்வி கற்ற தலைமுறையை சேர்ந்த நாம், சோழ சாம்ராஜ்யம் குறித்து அறியாமலேயே இருந்ததற்கு வருந்த வேண்டும் என்றும் சோழ சாம்ராஜ்யம் குறித்த பல தகவல்களை இந்த படத்தில் ஆதாரத்துடன் காண்பிக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்' என்றும் கூறியுள்ளார்.
லைகா பதில்
ஆனந்த் மஹிந்திரா ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள லைகா நிறுவனம், 'உங்கள் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நிச்சயம் 'பொன்னியின் செல்வன்' இருக்கும் என்றும் இந்த படம் இன்று வெளியாகியுள்ளது என்றும் இந்த படத்தை நீங்கள் பாருங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications