மஞ்சப்பை என்பது தமிழக கலாசாரத்தோடு ஒன்றியது என்று கூறினால் அதை யாராலும் மறுக்க முடியாது. திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது பரிசு பொருட்களை மஞ்சப்பையில் கொடுப்பதுதான் கலாச்சாரமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் மத்திய அரசு ஒரு சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்ததால் மஞ்சப்பை உபயோகம் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு தம்பதி, மஞ்சப்பை தயாரிப்பின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
மஞ்சப்பை தயாரிக்கும் தம்பதி
பெங்களூரு மற்றும் சென்னையில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்த கௌரி கோபிநாத் மற்றும் கிருஷ்ணன் சுப்பிரமணியம் தம்பதி தங்கள் வேலையை ராஜினமா செய்துவிட்டு சொந்த ஊரான மதுரைக்கு திரும்பி மஞ்சப்பை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மஞ்சப்பையின் அவசியம்
நமது கலாசாரத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மஞ்சப்பை அவசியத்தை மக்களுக்கு உணர வைக்க முடிவு செய்தோம் என்று பேட்டி ஒன்றில் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முதலில் தங்கள் நண்பர்கள் குடும்பத்தினர் மத்தியில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த தம்பதி, உள்ளூர் தையல்காரர்களின் உதவியுடன் சிறிய அளவில் மஞ்சள் பைகளை உற்பத்தி செய்ய தொடங்கினர். ஒரு சில நாட்களில் தேவை அதிகரித்ததால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த தம்பதி உணர்ந்தனர்.
மஞ்சப்பை நிறுவனம்
2014ஆம் ஆண்டு 'யெல்லோ பேக்' என்ற நிறுவனத்தை தொடங்கி எட்டு ஆண்டுகளில் தற்போது மஞ்சப்பை உற்பத்தியில் இந்நிறுவனம் சாதனை செய்து வருகிறது. அது மட்டுமின்றி ஏராளமான பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் இந்நிறுவனம் அளித்து வருகிறது. 2015ஆம் ஆண்டு தங்கள் கார்ப்பரேட் வேலையை ராஜினாமா விட்டு தற்போது இந்நிறுவனத்தை விரிவுபடுத்தி உள்ள இந்த தம்பதி, 2019ஆம் ஆண்டு என்ஜிஓ யெல்லோ பேக் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை நிறுவினர்.
முதல் இரண்டு ஆண்டுகள்
தங்கள் நிறுவனம் குறித்து கெளரி-கிருஷ்ணன் தம்பதி கூறியபோது, 'மஞ்சப்பை தயாரிக்க முடிவு செய்தாலும் இந்நிறுவனத்தை தொடங்குவது அவ்வளவு எளிதாக எங்களுக்கு இல்லை. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை மாற்ற வேண்டியதன் அவசியத்தை நுகர்வோரை நம்ப வைப்பது கடினமாக இருந்தது. குறிப்பாக முதல் இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் எங்களுக்கு கடினமாகவே இருந்தது' என்று கூறினர்.
ரூ.20 முதல் ரு.200 வரை
இந்த நிறுவனத்தில் யெல்லோபேக் பேக்கேஜிங் பைகள், ஆடை பாதுகாப்பு பைகள், டோட்ஸ் மற்றும் டிராஸ்ட்ரிங் பைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த தயாரிப்புகள் ரூ.20ல் தொடங்கி ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் வாடிக்கையாளர்களின் தேவைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன என்றும் தங்கள் தயாரிப்புகளை வலைத்தளம் அல்லது பல சமூக ஊடக தளங்கள் மூலம் சந்தைப்படுத்துவதாகவும் கெளரி கூறியுள்ளார்.
ரூ.3 கோடி
தொற்றுநோய் நேரம் மிகவும் சவாலானது என்றும், அந்த இரண்டு ஆண்டுகளில் எங்கள் விற்பனை பெருமளவில் பாதித்தது என்றும், ஆனால் இப்போது மீண்டும் நல்ல விற்பனை தொடங்கியிருப்பதாகவும், அடுத்த ஆண்டுக்குள் ரூ 3 கோடி வருமானம் எட்டும் என்று நம்புகிறோம்' என்றும் கெளரி தெரிவித்துள்ளார்.
மதுரை மதிச்சியம்
2016-ம் ஆண்டு மதுரை மதிச்சியம் பகுதியில் இந்நிறுவனம் தங்களது முதல் மையத்தை அமைத்தது. அங்குள்ள பெண்கள் வருமானம் இல்லாமல் இருந்ததால், இந்நிறுவனம் அந்த பெண்களுக்கு வேலை கொடுத்து வருமானத்தை தந்தது. வேலைக்கு சேரும் பெண்களுக்கு இலவச திறன் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுடன் நல்ல வருமானத்தையும் வழங்கி வருகிறது.
250 பெண்கள்
தற்போது 'யெல்லோ பேக்' நிறுவனத்தில் சுமார் 40 பெண்கள் பணிபுரிகின்றனர் என்றும், அவர்களுக்கு ஹப் என்னும் கட்டிங், துணி அச்சிடுதல் போன்ற ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் தந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை 200ஆக அதிகரிக்கும் என நம்புவதாகவும் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு கல்வி
பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் குழந்தைகளின் கல்வித்தேவையையும் நாங்கள் கவனித்து வருகிறோம் என்றும் கிருஷ்ணன் பெருமையுடன் கூறியுள்ளார். எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் குழந்தைகளின் கல்விக்காக யெல்லோபேக் அறக்கட்டளையை தொடங்கி கல்வித் திட்டத்திற்கான நிதி மற்றும் மானியங்களை கவனித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வி நிறுவனம்
நாங்கள் ஆரம்பித்த கல்வி நிறுவனத்தில் முதலில் 40 மாணவ, மாணவிகள் இருந்த நிலையில் தற்போதுசுமார் 150 குழந்தைகள் உள்ளனர் என்றும், குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆசிரியைகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் சிறப்பாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கெளரி-கிருஷ்ணன் தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.