இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர்களின் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா தலைமை வகிக்கும் மஹிந்திரா குழுமம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கெனப் பிரத்தியேகமாக ஒரு கேப் சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இப்புதிய வர்த்தகத்தின் பெயர் Alyte.
இதுமட்டும் அல்லாமல் மஹிந்திரா குழுமத்தின் கீழ் இருக்கும் அனைத்து மொபிலிட்டி தொடர்பான வர்த்தகம் அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் ஒரு மாபெரும் முடிவையும் மஹிந்திரா குழுமம் எடுத்துள்ளது.
Alyte நிறுவனம்
மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராம்பிரவீன் சுவாமிநாதன் கூறுகையில், இக்காலாண்டில் இருந்து இந்தியா முழுவதும் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கேப் சேவையை மஹிந்திரா குழுமம் அறிமுகப்படுத்த உள்ளது.
இதன் மூலம் மஹிந்திரா குழுமம் தனது மொபிலிட்டி வர்த்தகத்தை அடுத்தத் தளத்திற்குக் கொண்டு செல்ல தயாராகியுள்ளது.
மொபிலிட்டி சர்வீசஸ்
மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் மொபிலிட்டி சேவை நிறுவனமான Alyte-ல், மஹிந்திரா குழுமம் 55 சதவீத பங்குகளை வைத்திருக்கும் மீரு கேப்ஸ், கூட்டணி முறையில் இயங்கி வரும் எலக்ட்ரிக் கேப் சேவை நிறுவனமான Glyd, பழைய கார்களை விற்பனை செய்யும் First Choice ஆகிய அனைத்து வர்த்தகத்தையும் மொபிலிட்டி சர்வீசஸ் பிரிவில் சேர்த்து இதை மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வைக்க முடிவு செய்துள்ளது.
மொபைல் செயலி
மேலும் Alyte நிறுவனம் அடுத்த ஒரு மாதத்தில் ஒரு மொபைலில் பயன்படுத்தும் வகையில் செயலியை உருவாக்க உள்ளது. இந்நிறுவனம் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் ஊழியர்களைத் தங்களது வீடு முதல் அலுவலகம் வரையிலும், அலுவலகத்தில் இருந்து வீடு வரையிலும், அலுவலகக் கிடங்களுக்கு அல்லது மீட்டிங் ஆகியவற்றுக்கு அழைத்துச் செய்யும் சேவையை மிகப்பெரிய அளவில் சிறப்பான முறையில் செய்ய உள்ளது.
தனிப்பட்ட சேவை
அதுமட்டும் அல்லாமல் Alyte நிறுவனத்தின் இச்சேவை வாயிலாக ஒரு நிறுவனத்தின் ஊழியர் On-Call சேவை முலம் விமான நிலையம் போன்ற அலுவல் ரீதியான அனைத்து பணிகளுக்கும் கே புக் செய்துகொள்ள முடியும்.
ஊழியர்கள் தங்களது நிறுவனத்தின் பணியாளர் எண்-ஐ (Employee Id) வைத்து செயலிக்குள் நுழைந்து எளிதாக அனைத்து விதமான சேவைகளையும் பெறலாம்.
போட்டி
Alyte நிறுவனத்தின் அறிமுகத்தின் மூலம் மஹிந்திரா குழுமம் தற்போது ஆன்லைன் டாக்சி சேவை அளிக்கும் ஓலா, உபர் ஆகிய நிறுவனங்களுடன் நேரடியாகப் போட்டி போட உள்ளது. இவ்விரு நிறுவனங்களும் நிறுவனங்களுக்கான சேவையை ஏற்கனவே அளித்து வரும் நிலையில் மஹிந்திராவின் வருகை இத்துறையில் பெரிய அளவிலான போட்டியை உருவாக்கும் எனத் தெரிகிறது.