இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா டிராக்டர் மற்றும் பயணிகள் வாகன உற்பத்தியில் தனக்கென ஒரு தனியிடத்தினை தடம் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிலும் இந்தியாவினை சேர்ந்த இந்த முன்னணி நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே சற்று சரிவினை கண்டு வந்தது.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மட்டும் அல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த வாகன உற்பத்தி நிறுவனங்களுமே கடந்த பல மாதங்களாகவே தொடர்ச்சியான பல சரிவுகளை கண்டு வருகின்றன.
குறைந்து வரும் தேவை
இந்த நிலையில் தற்போது உலகினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கும் கொரோனா வைரஸ் தாக்கதினால், உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் இதனால் மக்கள் பலியாகி வரும் நிலையில் மறுபுறம் பல தொழில்கள் மற்றும் வர்த்தகங்கள் பெரும்பாலும் முடங்கியுள்ளன. மேலும் அதிகரித்து வரும் கொரோனாவில் மக்களின் நுகர்வும் குறைந்துள்ளது. இதனால் தேவையும் குறைந்து வருகிறது.
உற்பத்தி நிறுத்தம்
இது இப்படி எனில் மறுபுறம் தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால் பல இந்திய உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தியினை நிறுத்தி வருகின்றன. அந்த டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஆலையை நாளை முதல் மூட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாளை மாலை முதல் மூடல்
தற்போது இந்த லிஸ்டில் இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளாரான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனமும் நாளை மாலை முதல் தனது சில ஆலைகளை மூட உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக நாக்பூரில் உள்ள டிராக்டர் உற்பத்தியை உடனடியாக நிறுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தொழிலாளர்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எந்தெந்த ஆலைகள்
மேலும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் புனே ஆலை ( சக்கான்) மற்றும் கண்டிவாலி (மும்பை( ஆலைகளையும் திங்கட்கிழமை இறுதிக்குள் மூடும் என்று பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த இடை நீக்கம் எத்தனை நாள் நீடிக்கும் என்பதை இந்த நிறுவனம் அறிவிக்கவில்லை.
மகாராஷ்டிரா ஆலை மூடல்
இது குறித்து அந்த நிறுவன வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் குறித்த கவலைகள் அதிகளவில் பரவி வருவதால், நாக்பூர் ஆலையினை மூட நடவடிக்கையினை எடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதோடு திங்கட்கிழமை இரவு முதல் சாகன் மற்றும் கண்டிவாலி ஆலைகளில் எந்த வேலையும் செய்யவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை
கடந்த வாரத்தில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்து பணிபுரியும் படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும் பலர் வெளி நாட்டிற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளனர். ஆக தவிர்க்க முடியாத பட்சத்தில் பலர் தொழில்சாலைகளுக்கு வரவழைக்கப்பட்டனர். எனினும் நாளை மாலை முதல் இந்த மூன்று ஆலைகளும் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.