இந்தியாவில் பல சேவைகளுக்கு ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது மக்களுக்குப் பெரும் தொல்லையாக இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகளில் சில தளர்வுகளைப் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் அறிக்கையின் போது அறிவிக்கப்பட உள்ளது.
மத்திய அரசு அனைத்து நிதி பரிமாற்றங்களையும் உரிய நபர் தான் செய்கிறார்களா, நிதி பலன்களுக்கும் சரியான நபர்களுக்குச் செல்கிறதா என்பதை உறுதி செய்யவே பான் கார்டு, ஆதார் கார்டு-களைப் பல சேவைகளுக்குக் கேட்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பான் கார்டு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்படத் திட்டமிட்டு வருவதாகவும், இதற்கான அறிவிப்பு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 2வது ஆட்சி காலத்தின் கடைசிப் பட்ஜெட் அறிக்கையில் வெளியிடப்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
பட்ஜெட் 2023
பிப்ரவரி 1, 2023ல் மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என அதிகப்படியான எதிர்பார்ப்பு இருக்கிறது.
பான் எண் தளர்வுகள்
இந்த நிலையில் பான் எண் தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்கப்படும் எனக் கூறப்படுகிறது. மத்திய அரசு சில முக்கியமான பணப் பரிமாற்றங்களுக்குப் பான் கார்டு-ஐ ஆதாரமாகச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் நிலையில், ஆதார் அட்டை காட்டுவதன் மூலம் இதைச் செய்லப்படுத்த அனுமதி அளிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
நிதி பரிமாற்றங்கள்
இதன் மூலம் நிதி பரிமாற்றங்களைச் செயல்படுத்தும் நிதி நிறுவனங்கள் அனைத்து இப்புதிய மாற்றத்தை அறிவிப்புக் கொண்டு வந்த பின்பு உடனடியாக நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பான் கார்டு இல்லாதவர்கள் கூட ஆதார் அட்டை கொண்டு தேவையான நிதி பரிமாற்றங்களைச் செய்துகொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி கணக்குகள்
பெரும்பாலான வங்கி கணக்குகள் ஆதார் எண் உடன் இணைக்கப்பட்டுள்ளதால், பான் எண் நிதி பரிமாற்றங்களுக்கான தேவையில்லை என்று வங்கிகள் அரசிடம் விளக்கம் கூறி தளர்வுகளை அளிப்பதற்கான கோரிக்கையை வைத்துள்ளது.
வருமான வரிச் சட்டம் 206AA
தற்போது பான் எண் வழங்கப்படாவிட்டால் வருமான வரிச் சட்டத்தின் 206AA பிரிவின்படி, பரிவர்த்தனைக்கு 20 சதவீதம் டிடிஎஸ் விதிக்கப்படும், இது ஒருவருடைய வருமான வரி வரம்பு குறைவாக இருந்தாலும் கூட 20 சதவீதம் வரி கழிக்கப்படுகிறது.
தனிநபர் வங்கி கணக்கு
தனிநபர்களைப் பொறுத்தவரையில், கிட்டத்தட்ட எல்லா வங்கிக் கணக்குகளும் ஏற்கனவே ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும், வருமான வரிச் சட்டத்தின் 139A(5E) பிரிவின் கீழ், குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்குப் பான் எண்ணுக்குப் பதிலாக ஆதாரை மேற்கோள் காட்ட அனுமதிக்கிறது என வங்கி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வரி ஏய்ப்பு
வருமான வரிச் சட்டம் பிரிவு 206AA ஆனது TDS சரியான விகிதத்தில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும், PAN இல்லாத அல்லது குறிப்பிட்ட பரிவர்த்தனைகளில் தங்கள் PAN எண்ணைக் குறிப்பிடாத தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் எனப் பல பிரிவினர் வரி ஏய்ப்பு செய்வதைத் தடுப்பதற்கும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
விளக்கம்
இந்த நிலையில் மத்திய அரசின் பான் - ஆதார் கட்டாயம் மற்றும் தளர்வு குறித்துப் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் விளக்கம் மற்றும் அறிவிப்புகள் மூலம் தனிநபர் வரி செலுத்துவோருக்குப் பயனளிக்கும்.