நாட்டின் இரு பெரும் பில்லியனர்களான முகேஷ் அம்பானியும், கெளதம் அதானியும், எதிர்கால வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, பல்வேறு துறைகளில் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்து வருகின்றனர். புது புது திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.
பல நிறுவனங்களை கையகப்படுத்தியும் வருகின்றனர். யார் முதலிடம் என்ற கடும் போட்டியே அம்பானிக்கும் அதானிக்கும் இடையில் நிலவி வருகின்றது.
சமீபத்திய காலமாக அம்பானியின் சொத்து மதிப்பினை காட்டிலும், அதானியின் சொத்து மதிப்பானது வேகமாக அதிகரித்து வருகின்றது. இன்று சர்வதேச அளவில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் அதானி.
RIL Vs அதானி பவர் Vs NTPC
இப்படி கடும் போட்டிகள் நிலவி வரும் நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், அதானி பவர் நிறுவனமும் நேரடியாக போட்டி களத்தில் குதித்துள்ளன. தற்போது இந்த நிறுவனங்களுக்கும் போட்டியாக பொதுத்துறை நிறுவனமாக என்டிபிசியும் களத்தில் குதித்துள்ளது.
எதற்காக போட்டி?
இந்த மூன்று நிறுவனங்கள் மட்டும் அல்ல, கிட்டதட்ட 2 டஜன் நிறுவனங்களும், சண்டிகாரில் உள்ள திவாலான நிறுவனமான எஸ்கேஎஸ் பவர் ஜெனரேஷன் (SKS Power Generation) நிறுவனத்தினை வாங்க ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாரெல்லாம் ஆர்வம்?
இந்த பட்டியலில் டோரண்ட் பவர், ஜிண்டால் பவர் லிமிடெட், வேதாந்தா குழுமம், டிபி பவர், சர்தா எனர்ஜி& மினரல்ஸ், ஜிண்டால் இந்தியா தெர்மல், ஆதித்யா பிர்லா ARC, பீனிக்ஸ் ARC,ப்ரூடெண்ட் ARC,உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த நிறுவனத்தினை வாங்க ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிகிறது.
இரண்டு வங்கிகளில் கடன்
எஸ்கேஎஸ் பவர் ஜெனரேஷன் நிறுவனம் திவால் நிலையில் உள்ள நிலையில், அதற்கான தீர்மான செயல்முறைகளுக்கு கடந்த ஏப்ரல் 2022 முதல் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இரண்டு வங்கிகளில் 1890 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. இதில் பேங்க் ஆப் பரோடாவில் 1740 கோடி ரூபாயும், எஸ்பிஐ-யில் 150 கோடி ரூபாய் நிலுவையும் கட்ட வேண்டியுள்ளது.
ஏன் இந்தளவுக்கு ஆர்வம்?
திவால் நிலையில் உள்ள இந்த நிறுவனத்தினை வாங்கத் தான் பல நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த ஆலையானது நிலக்கரி மற்றும் பர்சேஸ் பவர் ஒப்பந்தங்களுடன் செயல்படும் ஒரு ஆலையாகும். இதுபோன்ற ஆலைகள் இன்று அமைவது கடினம். இது செலவை குறைக்கும் கேப்டிவ் ஆலை என்பதால், பல நிறுவனங்களும் ஆர்வம் காட்டியுள்ளன என தகவல்கள் கூறுகின்றன.
ஆலையின் திறன்
இந்த எஸ்கேஎஸ் ஆலையானது 600 மெகாவாட் திறன் கொண்டது. தற்போதைய நிலையில் 300 மெகாவாட் மட்டுமே இயங்கிக் கொண்டுள்ளது. இந்த ஆலையை யாரேனும் வாங்கும் வரையில், இதனை இயக்கி பராமரிக்கும் பணியானது என்டிபிசி-க்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்
இந்த ஆலையின் மற்றொரு சிறப்பம்சம், சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட், கோல் இந்தியாவுடன் 25 வருட எரிபொருள் ஒப்பந்தத்தினை கொண்டுள்ளது. மேலும் இந்த ஆலைக்கு நேரடியாக நிலக்கரியை கொண்டு செல்லும் ரயில் பதையும் உள்ளது.
இது தவிர ராஜஸ்தான், பீகார் மற்றும் சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களுடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தினையும் செய்துள்ளது. இதுவும் வாங்குபவர்களின் ஆர்வத்தினை அதிகரித்துள்ளது.
ஏன் அதிக ஆர்வம்
ஒரு புதிய ஆலையை அமைக்க ஒரு மெகவாட்டிற்கு 8 கோடி ரூபாய் செலவாகும். அனைத்து அனுமதிகளுடன் கூடிய இந்த ஆலை பாதி விலைக்கு கிடைக்கும் என்பதும் வாங்குபவர்களின் ஆர்வத்தினை மேலும் அதிகரித்துள்ளது. அதோடு வாங்கியதும் சிறிய காலத்திலேயே இயக்க வைக்கவும் முடியும்.
எப்போது நிறுத்தம்?
நவீன் ஜிண்டால் குழுமத்தின் ஒரு பகுதியான ஜிண்டால் பவர் மற்றும் வேதாந்தா போன்ற ஏலதாரர்கள், ஆலைக்கு அருகாமையிலேயே செயல்பட்டு வருகின்றனர். ஆக இதனை கையகப்படுத்துவது அவர்களுக்கு ஏற்ற ஒன்றாகவும் இருக்கும். இப்படி பல்வேறு சாதகமான அம்சங்களை கொண்ட இந்த ஆலை நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிதி பிரச்சனை காரணமாக நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் நிறுத்தப்பட்டது.