கொரோனா வைரஸ் என்ற வார்த்தையே மக்கள் மத்தியில், ஒரு பதற்றத்தினை ஏற்படுத்தும் அளவுக்கு, மக்களை பயமுறுத்தி வருகிறது.
Recommended Video
இது வயலில் இறங்கி வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் முதல், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியர்கள் என அனைவரின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய பிரச்சனையாக வந்துள்ளது எனலாம்.
அதிலும் ஏற்கனவே பொரூளாதார நெருக்கடி சமயங்களில் ஐடி ஊழியர்களை மிரட்டி வரும் லே ஆஃப், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது.
பணி நீக்கம் செய்யாமல் இருக்க அதிரடி நடவடிக்கை
இதற்கிடையில் தற்போது கொரோனாவின் தாக்கம் உலகம் முழுக்க பரவி வரும் நிலையில், பல இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான ஊழியர்களை பணி நீக்கம் செய்யாமல் இருக்க, பல விதமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏனெனில் உலகம் முழுக்க ஐடி நிறுவனங்களுக்கு தேவையான புராஜக்ட்கள் கிடைக்காமல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில நிறுவனங்கள் இருக்கும் வேலையையே செய்ய முடியாமலும் தவித்து வருகின்றன.
சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு நிறுத்தி வைக்கலாம்
இந்த நிலையில் நிறைய ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதிய உயர்வு, சம்பள உயர்வு என அனைத்தும் நிறுத்தி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் நடுத்தர முதல் உயர் அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வுகளை முடக்கலாம் என்று இத்துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சிஎன்பிசியில் வெளிவந்துள்ளது.
சம்பளத்தினை குறைக்க ஆலோசனை
மேலும் இது குறித்தான ஆய்வினை தற்போது செய்து வந்தாலும், இது குறித்தான முடிவினை ஜூலை மாதத்தில் தான் செய்ய முடியும் என்றும் இத்துறை சார்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர். அது மட்டும் அல்ல கூடுதலாக பல நிறுவனங்கள் உயர் அதிகாரிகளின் சம்பளங்களைக் குறைக்க திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சம்பள விகிதங்கள் ஆராய்வு
அது மட்டும் அல்ல சில நிறுவனங்கள் அனைத்து ஊழியர்களின் சம்பள விகிதத்தினை ஆராய்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் பல நிறுவனங்கள் பணி நீக்கத்தினை தவிர்க்க முடிவு செய்த போது தான் இப்படி ஒரு ஆயுதத்தினை கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதிய பணியமர்த்தல் இல்லை
இதோடு புதிய பணியமர்த்தல் அதாவது கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்களில் உள்ளவாறு புதிய ஊழியர்களை பணியமர்த்துவதில் கால அவகாசம் நீடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பணி நீக்கம் செய்ய நினைத்த பெஞ்ச் ஊழியர்களை ஒப்பந்த ஊழியர்களாக மாற கேட்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கேம்பஸ் இண்டர்வியூ குறையும்
மேலும் இந்த ஆண்டு கேம்பஸ் இண்டர்வியூ 50 -80 சதவீதம் வரை குறையக்கூடும் என்றும் சில நிறுவனங்களில் மனிதவள மேலாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது மட்டும் அல்ல ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பணியில் சேர கொடுத்திருந்த கடிதங்கள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனவாம்.
பணி நீக்கம்
இது தான் இப்படி எனில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான அறிக்கையில் பல லட்சம் ஐடி ஊழியர்கள் தங்களது பணியினை இழக்கக்கூடும் என ஒரு அறிக்கை தெரிவித்து இருந்தது. இந்த கொரொனாவால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? தெரியவில்லை. இன்னும் ஊழியர்கள் எப்படி எல்லாம் பிரச்சனையை எதிர்கொள்ள போகிறார்களோ தெரியவில்லை.