இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி தனது வாடிக்கையாளர்களுக்குப் புதிதாக ஸ்மார்ட் பைனான்ஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் சேவை மூலம் வாடிக்கையாளர்களுக்குக் கார் வாங்குவதற்கான அனைத்து நிதியியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஓன் ஸ்டாப் சொல்யூஷனை வழங்க முடிவு செய்துள்ளது.
மாருதி சுசூகி நிறுவனத்தின் இச்சேவை மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையிலான இருக்கும் தூரத்தைக் குறைத்து அதிகளவிலான வர்த்தகத்தைக் குறைவான நேரத்தில் மாருதி சுசூகி பெற முடியும்.
ஸ்மார்ட் பைனான்ஸ் தளம்
மாருதி சுசூகி அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் பைனான்ஸ் தளத்தின் மூலம் ஒரு வாடிக்கையாளர் கார் லோன் பெறுவதற்கான தகுதிகளை தெரிந்துகொள்வது மட்டும் அல்லாமல் கடன் பெறக் கூட்டணி தேவையா, கடன் காலம் எவ்வளவு போன்ற பிற முக்கிய விஷயங்களையும் பெற முடியும். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் கார் வாங்குவதில் இருக்கும் நிதி சார்ந்த குழப்பம் மற்றும் தடையை முழுமையாக நீக்க பயன்படுகிறது.
நெக்ஸா வாடிக்கையாளர்கள்
ஸ்மார்ட் பைனான்ஸ் தளத்தின் சேவை அனைத்தும் தற்போது மாருதி சுசூகி நிறுவனம் நெக்ஸா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கொடுக்கிறது. ஆனால் அடுத்த சில காலத்தில் இத்திட்டத்தின் சேவைகள் அரினா வாடிக்கையாளர்களுக்கும் கொடுக்கப்படும் என மாருதி சுசூகி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தச் சேவையின் அறிமுகத்தின் காரணமாக இனி நெக்ஸா வாடிக்கையாளர்கள் நெக்ஸா இணையத் தளத்திலேயே கார் வாங்குவது மட்டும் அல்லாமல் கார் லோனையும் வாங்க முடியும்.
பல சேவைகள் ஒரே இடத்தில்
மேலும் இந்தத் தளத்தில் வாடிக்கையாளர்கள், சந்தையில் இருக்கும் பல வங்கிகளில் தங்களுக்குத் தகுந்த வங்கிகளையும், வட்டி விகிதத்தையும் தேர்வு செய்யும் பெரிய வாய்ப்பு இத்தளத்தில் உள்ளது. கார் தேர்வு செய்வதில் துவங்கி கார் லோன் தேர்வு செய்வது, கடனுக்கான விண்ணப்பம் பதிவு செய்வது, கடன் ஒப்புதல் பெறுவது, கடன் தொகை வங்கியில் இருந்து நேரடியாகச் செலுத்துவது வரையில் அனைத்தும் இணையதளத்தின் வாயிலாகவே செய்ய ஒரு சிறப்பான தளத்தை மாருதி உருவாக்கியுள்ளது.
24 மணிநேரமும்
இந்த அனைத்து பணிகளுக்கும் மாருதி சுசூகி மற்றும் வங்கி அமைப்பில் இருந்து 24 மணிநேரமும் லோன் விண்ணப்பம் மற்றும் கார் டெலிவரி குறித்த அப்டேட்கள் பார்க்க முடியும் என மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
வங்கி கூட்டணி
இந்தச் சேவைக்காக மாருதி சுசூகி தற்போது ஹெச்டிஎப்சி வங்கி, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, சோழமண்டலம் பைனான்ஸ், ஏயு ஸ்மாஸ் பைனான்ஸ் பேங்க், மஹிந்திரா பைனான்ஸ், கோட்டாக் மஹிந்திரா ப்ரைம் ஆகிய வங்கிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.
குருக்ராம் நகரில் சோதனை
தற்போது முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட் பைனான்ஸ் சேவை குருக்ராம் நகரில் சோதனை முயற்சியாகச் செய்யப்பட்டு வாடிக்கையாளர்கள் குறைகளைக் கேட்டு மேம்படுத்தும் பணிகளை நடைபெற்று வருகிறது. இச்சேவை முழுக்க முழுக்க வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் முயற்சியாக உள்ளது.
மாத சம்பள ஊழியர்கள்
மேலும் இந்தியாவில் சுமார் 30 நகரங்களில் நெக்ஸா வாடிக்கையாளர்கள் மற்றும் மாத சம்பள ஊழியர்களுக்கு இந்த ஸ்மார்ட் பைனான்ஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 30 நகரங்கள்
டெல்லி, குருக்ராம், லக்னோ, ஜெய்ப்பூர், மும்பை, புனே, அகமதாபாத், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், இந்தூர், கொல்கத்தா, கொச்சின், சண்டிகர், குவ்ஹாத்தி, கோவா, புவனேஸ்வர், போபால், கோவை, கோவை, சூரத், ராஞ்சி, ராஞ்சி, விசாகப்பட்டினம், உதய்பூர், கான்பூர், விஜயவாடா மற்றும் டேராடூன் ஆகிய பகுதிகளில் இச்சேவை நடைமுறையில் உள்ளது.