இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக இருக்கும் மாருதி சுசூகி-க்குப் போட்டியாக எத்தனை நிறுவனங்கள் வந்தாலும் எப்போதும் வர்த்தகத்தில் முன்னோடியாக உள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கிராண்ட் விட்டாரா கார் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இன்று மாருதி சுசூகி நிறுவனம் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மாருதி சுசூகி லாபம், வருவாய்
செப்டம்பர் காலாண்டில் மாருதி சுசூகி நிறுவனம் கடந்த ஆண்டை காட்டிலும் 4 மடங்கு அதிக லாபத்தைப் பெற்று முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இக்காலாண்டில் மாருதி சுசூகி 2062 கோடி ரூபாய் அளவிலான தொகையை லாபமாகப் பெற்றுள்ளது. இதே காலகட்டத்தில் மாருதி சுசூகி 29,931 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்று 46 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
வாகனங்களை விற்பனை
இதேபோல் இக்காலகட்டத்தில் மாருதி சுசூகி 36 சதவீத அதிக வாகனங்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. மேலும் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு 5.09 சதவீதம் அதிகரித்து 9.25 சதவீதம் அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில் உற்பத்தி பொருட்களின் விலை 3.9 சதவீதமும், இதர செலவுகள் அளவு 1.90 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
செப்டம்பர் காலாண்டு விற்பனை
மாருதி சுசூகி நிறுவனம் செப்டம்பர் மாத முடிவில் 4,12,000 வாகனங்களான ஆர்டர்களை வைத்துள்ளது, இதில் 1,30,000 ஆர்டர்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள கார்களுக்கு வந்த ஆர்டர்கள் எனக் காலாண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாருதி சுசூகி பங்கு விலை
மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் இன்றைய வர்த்தக முடிவில் மாருதி சுசூகி பங்கு விலை சிறப்பான காலாண்டு முடிவுகளின் எதிரொலியாக 5.60 சதவீதம் வரையில் உயர்ந்து 9548 ரூபாயாக உயர்ந்துள்ளது.
26.90 சதவீதம் உயர்வு
2022 ஆம் நிதியாண்டில் பெரும்பாலான முன்னணி நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்த நிலையில் மாருதி சுசூகி பங்குகள் மட்டும் 26.90 சதவீதம் உயர்வைப் பதிவு செய்துள்ளது. இந்த 10 மாதத்தில் மாருதி சுசூகி பங்குகள் 2,024 ரூபாய் உயர்ந்துள்ளது. மாருதி சுசூகி நிறுவன பங்குகளின் 52 வார உயர்வு 9549.95 ரூபாயாக உள்ளது.
செப்டம்பர் மாத விற்பனை
செப்டம்பர் மாதம் மட்டும் மாருதி சுசூகி நிறுவனம் உள்நாட்டில் வாகன விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்து 1,54,903 ஆக அதிகரித்துள்ளது. இந்த அளவீடு கடந்த ஆண்டில் இதேகாலகட்டத்தில் 68,815 வாகனங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எலக்ட்ரிக் கார்
மாருதி சுசூகி நிறுவனம் இந்தியாவில் 2025 முதல் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது, டாடா மோட்டார்ஸ் EV போட்டியில் முன்னேறிய நிலையில் சமீபத்தில் மஹிந்திராவும் களத்தில் இறங்கியுள்ளது.
புதிய தொழிற்சாலை
இந்நிலையில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்காகப் புதிதாக ஒரு கார் உற்பத்தி தொழிற்சாலையை ஹரியானா-வில் நிறுவ முடிவு செய்துள்ளது மாருதி சுசூகி. இதேபோல் எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி தொழிற்சாலையைச் ஜப்பான் நாட்டின் சுசூகி தனியாகச் சொந்த முதலீட்டில் குஜராத் மாநிலத்தின் ஹன்சல்பூர்-ல் அமைக்கத் திட்டமிட்டு உள்ளது, இத்தொழிற்சாலை 2026 முதல் செயல்படத் துவங்கும்.
R&D நிறுவனம்
ஜப்பான் நாட்டின் சுசூகி மோட்டார் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி தொழிற்சாலையைச் தனியாகத் துவங்குவது போல் புதிதாக ஒரு குளோபல் R&D நிறுவனத்தை அமைக்கத் திட்டமிட்டு உள்ளது.
தரம் மேம்பாடு
இப்புதிய குளோபல் R&D நிறுவனம் சுசூகி ஜப்பான் நிறுவனத்தின் நேரடி கிளை நிறுவனமாக இருக்கும் என்பதால் சொந்த முதலீட்டிலும், நிர்வாகத்திலும் இந்நிறுவனத்தை அமைக்க உள்ளது. இந்தக் குளோபல் R&D நிறுவனம் மூலம் இந்திய கார்கள் மட்டும் அல்லாமல் உலகளாவிய கார்களின் தரமும் உயரும்.
104.4 பில்லியன் டாலர் முதலீடு
ஏற்கனவே ஜப்பான் நாட்டின் சுசூகி நிறுவனம், இந்தியாவில் 104.4 பில்லியன் டாலரை எலக்ட்ரிக் வாகனம் மற்றும் பேட்டரி தொழிற்சாலைக்காக முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் தனது சர்வதேச வர்த்தகத்தை இந்தியாவில் இருந்து சீர்படுத்தத் திட்டமிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications