19 வருடங்களுக்கு முன்னர் மாருதி சுஸுகி கார் வாங்கியதற்கு பதிலாக அந்த நிறுவனப் பங்குகளை வாங்கி இருந்தால் இந்நேரம் கோடீஸ்வரர் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகள் 20 வருடங்களில் பல மடங்கு நாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் மாருதி சுஸுகி பங்குகள் 19 வருடங்களில் 4975 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாருதி சுஸுகி பங்குகள்
மாருதியின் பங்குகள் கிட்டத்தட்ட 19 வருடங்களில் மிகவும் வலுவான ரிட்டர்ன் கொடுத்துள்ள ஒரு பங்காக உள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு ஜூலை அன்று பிஎஸ்இயில் மாருதி சுஸுகியின் பங்கு ரூ.173.40 ஆக இருந்தது. இன்று இந்த பங்கின் விலை ரூ.8713.20 ஆகும். 19 வருடத்தில் இந்தப் பங்கு சுமார் 4925 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. அதாவது, முதலீட்டாளர்களின் பணத்தை 49 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
10 ஆண்டுகளில் 545.5% உயர்வு
2003ஆம் ஆண்டு மாருதி சுஸுகி பங்கை வாங்காவிட்டாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அதாவது 2012ஆம் ஆண்டு இந்த பங்கை அப்போதைய விலையான ரூ.1349.90 என வாங்கியிருந்தால் 545.5 சதவீதம் லாபம் கிடைத்திருக்கும். அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் பணத்தை 5 மடங்குக்கு மேல் சம்பாதித்துள்ளது என்பதும் உதாரணத்திற்கு 2012ஆம் ஆண்டு ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் இன்று அவர்களுக்கு கிட்டத்தட்ட ரூ.6 லட்சம் வரை கிடைத்திருக்கும்.
ஓராண்டு வருவாய்
மாருதி சுஸுகியின் பங்குகளின் ஓராண்டு வருவாய் 18.04 சதவீதமாகவும், 5 ஆண்டு வருமானம் 9.28 சதவீதமாகவும் உள்ளது. 2022ல் இதுவரை 15.87% வருமானத்தை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.2.63 லட்சம் சந்தை மூலதனம்
மாருதி சுஸுகியின் சந்தை மூலதனம் தற்போது ரூ.2.63 லட்சம் கோடியாக உள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருவதால் சந்தை மூலதனம் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.