உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ள காரணத்தால் ரஷ்யா மீது உலக நாடுகள் மட்டும் அல்லாமல் பல நிறுவனங்களும் தங்களது சேவைகளுக்குத் தடை விதித்துள்ளது.
இதன் அடிப்படையில் அமெரிக்க நிறுவனங்களான பேஸ்புக், கூகுள், யுடியூப் போன்றவை ஏற்கனவே சில முக்கிய வர்த்தக சேவைக்குத் தடை விதித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் உலகின் மிகப்பெரிய பேமெண்ட் நெட்வொர்க் சேவை நிறுவனமான மாஸ்டர்கார்டு நிறுவனம் ரஷ்யாவில் பல நிதியியல் சேவை நிறுவனங்களுக்குத் தனது சேவையைத் தடை செய்துள்ளது.
மாஸ்டர்கார்டு நிறுவனம்
மாஸ்டர்கார்டு நிறுவனம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரஷ்யாவின் பல நிதியியல் நிறுவனங்களுக்குத் தனது பேமெண்ட் நெட்வொர்க் சேவையை முடக்கியுள்ளது. இதனால் ரஷ்யாவிலும், வெளிநாட்டிலும் ரஷ்ய நிதியியல் வங்கியின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
ரஷ்யா போர்
உக்ரைன் மீது ரஷ்யா போர் செய்யும் காரணத்தால் அமெரிக்க அரசின் தடை உத்தரவுகளுக்கு ஆதரவாக மாஸ்ட்ர்கார்ட் நிறுவனமும் இந்தச் சேவை தடை உத்தரவை வெளியிட்டுள்ளது. மேலும் மாஸ்டர்கார்டு தொடர்ந்து சந்தை கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து முடிவுகளை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
SWIFT பேமெண்ட்
200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 11,000க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை இணைக்கும் SWIFT என்ற வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிமாற்ற முறையில் இருந்து ரஷ்யாவை மொத்தமாக வெளியேற்ற அமெரிக்கா, ஐரோப்பிய நட்பு நாடுகள் மற்றும் கனடா ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
பணப் பரிமாற்றம்
இதனால் ரஷ்யாவில் இருந்து பிற நாடுகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது, இதனால் ரஷ்யாவில் வெளிநாட்டினரும், வெளிநாட்டு நிறுனங்களும் முதலீடு செய்ய முடியாது. இந்நிலையில் மாஸ்ட்ர்கார்டு அறிவிப்பு மக்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
சொந்த பேமெண்ட் நெட்வொர்க்
மேலும் மாஸ்டர்கார்டு தடை உத்தரவால் மாஸ்டர்கார்டு வைத்துள்ள ரஷ்ய மக்கள் வங்கிகளில் இருக்கும் பணத்தை வெளியே எடுக்க ஏடிஎம் இயந்திரத்தின் முன் வரிசைகட்டி நிற்கின்றனர். ரஷ்யா 2014 தடைக்குப் பின்பு சொந்தமாகப் பேமெண்ட் நெட்வொர்க்-ஐ உருவாக்கி வருகிறது, இதனால் மாஸ்டர்கார்டு மூலம் பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.