அதிகளவிலான கடனிலும், நிதிநெருக்கடியிலும் சிக்கியுள்ள அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம், தொடர்ந்து தனது வர்த்தகத்தைச் சக போட்டி தனியார் நிறுவனங்களிடம் இழந்து வருகிறது.
இதனால் ஏர் இந்தியாவை விற்பனை செய்து நாட்டின் பிற வளர்ச்சி திட்டங்களுக்கு முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டது மத்திய அரசு. இதன் படி நீண்ட காலமாக ஏர் இந்தியாவை விற்பனை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தொடர் தோல்வியைத் தொடர்ந்து டிசம்பர் 14, 2020ஆம் தேதி விருப்ப விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
இந்த முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏர் இந்தியா ஊழியர்கள் இணைந்து இந்நிறுவனத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தனர் . இந்த மாபெரும் முயற்சிக்குப் பின்னால் இருக்கும் மிகமுக்கியமானவர் ஒரு பெண்.
ஏர் இந்தியா விற்பனை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏர் இந்தியாவை விற்பனை செய்ய 6வது முறை முயற்சி செய்து தோல்வி அடைந்த நிலையில், பங்கு விற்பனை அளவீட்டில் சில முக்கிய மாற்றங்களைச் செய்து இந்த முறையில் விற்பனை செய்ய அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேவேளையில் உலக நாடுகளில் விமானப் போக்குவரத்து மிகவும் மோசமான நிலையை அடைந்த நிலையில் கடனில் இருக்கும் ஏர் இந்தியாவைக் கைப்பற்றப் பெரிய அளவிலான போட்டி இல்லை.
கௌதம் அதானி
சமீபத்தில் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் நாட்டில் பல்வேறு விமான நிலையங்களைக் கைப்பற்றிய நிலையில் போட்டி குறைவாக இருக்கும் காரணத்தால் ஏர் இந்தியாவைக் கைப்பற்றக் களத்தில் இறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதானி குழுமம் முன்வரவில்லை.
அதானி குழுமத்திற்குப் பதிலாக டாடா குழுமம் மற்றும் ஏர் இந்தியா ஊழியர்கள் குழு தனியார் முதலீட்டு நிறுவனத்துடன் சேர்ந்து ஏர் இந்தியாவைக் கைப்பற்ற விண்ணப்பம் கொடுத்துள்ளது.
எல் அண்ட் டி
எல் அண்ட் டி நிறுவனத்தின் நிர்வாகத்தில் கடுமையான பிரச்சனைகள் நிலவிய போது ஏஎம் நாயக் தலைமையில் ஊழியர்கள் முன்வந்து எல் அண்ட் டி நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்றினர். இதன் பின்பு எல் அண்ட் டி நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சியும், சந்தை மதிப்பீடும் தாறுமாறாக வளர்ச்சி அடைந்தது.
மீனாட்சி மாலிக்
இதேபோல் தற்போது ஏர் இந்தியாவில் சுமார் 31 வருடம் பணியாற்றிய மீனாட்சி மாலிக் என்பவரின் தலைமையில் ஏர்இந்தியா ஊழியர்கள் குழு இந்நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இவர் பேச்சில் இருக்கும் தன்னம்பிக்கை ஏர் இந்தியா ஊழியர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது எனப் பலரும் தெரிவித்துள்ளனர்.
219 ஊழியர்கள்
ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஏர் இந்தியாவின் மீனாட்சி மாலிக் உட்படச் சுமார் 219 ஊழியர்கள் இணைந்து ஏர் இந்தியா ஏலத்தை நடத்தும் அமைப்பிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளது.
ஊழியர்கள் முதலீட்டில் மட்டும் இந்நிறுவனத்தைக் கைப்பற்ற முடியாது என்பதால் மீனாட்சி மாலிக் தலைமையிலான ஏர் இந்தியா ஊழியர்கள் குழு அமெரிக்கத் தனியார் முதலீட்டு நிறுவனத்துடன் சேர்ந்து விண்ணப்பித்துள்ளது.
1 லட்சம் ரூபாய் முதலீடு
ஏர் இந்தியாவின் ஊழியர்கள் குழு ஒன்று தலா 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் இந்நிறுவனத்தைக் காப்பாற்றும் முயற்சியில் அமெரிக்கா முதலீட்டு நிறுவனமான Interups Inc நிறுவனத்துடன் சேர்ந்து ஏலத்திற்கு விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது.
ஏர் இந்தியா பங்குகளின் பங்கீடு
இரு தரப்புகள் மத்தியில் எடுக்கப்பட்ட முடிவின் படி ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்றும் பட்சத்தில் ஊழியர்கள் குழு 51 சதவீத பங்குகளையும், Interups Inc நிறுவனம் 49 சதவீத பங்குகளை நிர்வாகம் செய்யும்.
மீனாட்சி மாலிக்-ன் முயற்சிகள் தற்போது அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
யார் இந்த மீனாட்சி மாலிக்?
மீனாட்சி மாலிக் 1989ல் ஏர் இந்தியா நிர்வாகப் பணிகளில் துவக்க ஊழியராகப் பணியில் சேர்ந்தார், இவர் இயற்பியலில் பட்டப்படிப்பையும், உத்கல் பல்கலைக்கழகத்தில் MBA பட்டமும் பெற்றவர். இவரின் தந்தை உபேந்திரநாத் மாலிக் 1961 பேச்ட் ஐஏஎஸ் அதிகாரி, தாய் ராஜ்குமாரி மாலிக் மருத்துவர்.
சமீபத்தில் மத்திய அரசு மேற்கொண்ட வந்தே பாரத் திட்டத்தின் முக்கிய அங்கம் வகித்தவர் மீனாட்சி மாலிக்.
2018ல் முதல் விற்பனைக்கான முயற்சி
மத்திய அரசு 2018ஆம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தில் சுமார் 76 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்காக அறிவித்தது. ஆனால் மத்திய அரசின் இத்திட்டத்திற்கும் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. குறிப்பாக அரபு நாடுகளின் முன்னணி விமான நிறுவனங்களான எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் ஆகியவை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிறுவனங்கள்.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு சுமார் 6 முறை ஏர் இந்தியாவை விற்பனை செய்ய முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு தொடர் தோல்வி
தொடர்ந்து தோல்வியின் காரணமாக மத்திய அரசு தற்போது ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் 100 சதவீத பங்குகளையும், ஏர் இந்தியாவின் கிரவுண்ட் ஹேண்ட்லிங் நிறுவனமான AI-SATS பிரிவில் 50 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்து இதற்காக விருப்ப விண்ணப்பத்தைப் பெற்றுள்ளது.
ஏர் இந்தியா ஊழியர்கள் அமைப்பு, Interups Inc நிறுவனங்களைத் தொடர்ந்து டாடா குழுமமும் விண்ணப்பம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா கடன் அளவு
மார்ச் 31, 2019 வரையிலான காலகட்டத்தின் அடிப்படையில் வெளியான தகவல்கள் படி ஏர் இந்தியாவின் மொத்த கடன் மதிப்பு 60,074 கோடி ரூபாய், இதில் 23,286.5 கோடி ரூபாய்க் கடனை ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம் ஏற்க வேண்டும். மீதமுள்ள தொகையை Air India Assets Holding Ltd (AIAHL) ஏற்றுக்கொள்ளும்.
ஏர் இந்தியா மகாராஜா
ஒரு காலத்தில் இந்திய விமானப் போக்குவரத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஏர் இந்தியா வர்த்தகப் போட்டியின் காரணமாகவும், தனியார் நிறுவனங்களின் அதிரடி வளர்ச்சியின் காரணமாகவும் தற்போது மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.