பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா-வின் இந்திய கிளையின் தலைவர் அஜித் மோகன் தனது பதவியில் இருந்து விலகுவதாக நவம்பர் 3 ஆம் தேதி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது மெட்டா இந்தியாவின் துணைத் தலைவராகச் சந்தியா தேவநாதன் என்பவரை நியமித்துள்ளதாக நவம்பர் 17 அன்று மெட்டா இந்தியா தெரிவித்துள்ளது.
யார் இந்தச் சந்தியா தேவநாதன்..?
அஜித் மோகன்
மெட்டா-வின் இந்திய கிளை நிறுவனத்தின் தலைவர் அஜித் மோகன் வெளியேறிய நிலையில், பேஸ்புக் இந்தியா பார்ட்னர்ஷிப் பிரிவின் இயக்குநர் மற்றும் தலைவரான மணீஷ் சோப்ரா தற்போது நிறுவனத்தை இடைக்கால அடிப்படையில் வழிநடத்தி வருகிறார்.
சந்தியா தேவநாதன்
இந்த நிலையில் தான் சந்தியா தேவநாதன் சரியான தேர்வாக இருக்கும் என மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான நிர்வாகம் முடிவு செய்து, மெட்டா இந்தியாவின் Head என்ற பதவியில் அல்லாமல் Vice President பதவியில் சந்தியா தேவநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆசியா பசிபிக் - கேமிங்
சந்தியா தேவநாதன் இதற்கு முன்பு ஆசியா பசிபிக் (APAC) சந்தையின் கேமிங் பிரிவை வழிநடத்தி வந்தார். மெட்டா இந்தியாவின் துணை தலைவர் பதவியில் ஜனவரி 1, 2023 முதல் தனது புதிய பதவியில் பணியை ஏற்க உள்ளார் சந்தியா.
ஆசிய பிசிபிக் தலைமைக் குழு
மெட்டா இந்தியாவின் துணை தலைவராக இருக்கும் சந்தியா தேவநாதன் Meta APAC இன் துணைத் தலைவர் Dan Neary கீழ் பணியாற்ற உள்ளார். இது மட்டும் அல்லாமல் சந்தியா தேவநாதன் மெட்டாவின் ஆசிய பிசிபிக் தலைமைக் குழுவின் முக்கியப் பகுதியாக இருப்பார் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆந்திர பல்கலைக்கழகம்
சந்தியா தேவநாதன் 1994-1998ல் ஆந்திர பல்கலைக்கழகத்தில் பிடெக் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார், அதைத் தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகத்தில் மேனேஜ்மென்ட் பட்டம் பெற்றார். 2014ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பிரிவில் பட்டம் பெற்றார்.
வங்கி டூ பேஸ்புக்
இதற்கு முன்பு சந்தியா தேவநாதன் சிட்டி வங்கியில் 10 வருடம், Standard Chartered Bank-யில் 6 வருடம், பேஸ்புக்-ல் 2016ல் சேர்ந்து பல பதவிகளில் பணியாற்றிக் கடைசியாக ஆசியா பசிபிக் (APAC) சந்தையின் கேமிங் பிரிவை வழிநடத்தி வந்த நிலையில் தற்போது மெட்டா இந்தியாவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
அஜித் மோகன் முடிவு
பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா-வின் இந்திய கிளை நிறுவனத்தின் தலைவர் அஜித் மோகன் தனது பதவியில் இருந்து விலகுவதாக நவம்பர் 3 ஆம் தேதி அறிவித்தார். இது மட்டும் அல்லாமல் அஜித் மோகன் பேஸ்புக்-ன் சக போட்டி நிறுவனமான ஸ்னாப்சாட் நிறுவனத்தில் ஆசிய பிரிவின் தலைவராகச் சேர்ந்துள்ளது மெட்டா உயர்மட்ட நிர்வாகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மார்க் ஜூக்கர்பெர்க்
அஜித் மோகன் வெளியேறிய சில நாட்களில் மெட்டா தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் 11000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்து இந்திய அலுவலகத்தில் பலரையும் பணிநீக்கம் செய்தார். இந்த மோசமான சம்பவத்திற்குப் பின்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் மெட்டா இந்தியாவில் இருந்து இரு பெரும் தலைவர்கள் வெளியேறினர்.
அபிஜித் போஸ் - ராஜீவ் அகர்வால்
வாட்ஸ்அப் இந்தியாவின் தலைவர் அபிஜித் போஸ் தனது பதவியை ராஜினாமா செய்து வெளியேறியுள்ளது பெரும் அதிர்ச்சி அளித்தது. பேஸ்புக்கின் பொதுக் கொள்கை இயக்குநர் ராஜீவ் அகர்வாலும் நிறுவன பதவிகளில் இருந்து மொத்தமாக வெளியேறினார்.