இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் மக்களுக்கு உயிர் பயத்தையும் காட்டியுள்ளது என்றால் மிகையில்லை. இந்தச் சூழ்நிலையில் மக்கள் தாங்கள் வாங்கிய கடனை சரியாகச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதன் மூலம் 2020 கொரோனா அலையில் ஏற்பட்டது போல் மீண்டும் மைக்ரோ பைனான்ஸ் துறையில் கடனுக்கான ஈஎம்ஐ பெறும் அளவுகள் குறைந்துள்ளது என்றும், இதற்கு முக்கியமான காரணம் அதிகரித்து வரும் கொரோனா தொற்று தான் எனவும் கூறப்படுகிறது.
ரேட்டிங் அமைப்பான ICRA ஏப்ரல் 2021ல் கடனுக்கான ஈஎம்ஐ பெறும் அளவில் 8 முதல் 10 சதவீதம் வரையில் குறையும் எனக் கணித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்தாத பட்சத்தில் அதன் அளவீடு மேலும் அதிகரிக்கும் என ICRA அமைப்பு எச்சரித்துள்ளது.
லாக்டவுன் காரணமாகவும், கொரோனா தொற்றுக் காரணமாக ஏற்பட்டு உள்ள வர்த்தகப் பாதிப்பு மூலம் ஏப்ரல் மாதம் மட்டும் சுமார் 70 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக CMIE அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் மக்கள் மத்தியில் வருமானம் பெரிய அளவில் குறையும்.
மேலும் மைக்ரோபைனான்ஸ் பிரிவில் கடன் பெறுவோர் பெரும்பாலும் சாமானிய மற்றும் பொருளாதாரத்தில் மிடில் கிளாஸ் மக்களாக இருக்கும் நிலையில், வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் வருமான இழப்பு எதிர்கொண்டவர்கள் கடனுக்கான ஈஎம்ஐ தொகையைச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.