இன்றைய போட்டி மிகுந்த வர்த்தகச் சந்தையில், நிறுவனங்கள் ஊழியர்களிடம் எப்படியெல்லாம் வேலை வாங்க வேண்டும் என்பதற்காகத் தனியாக ரூம் போட்டு யோசிக்கும் நிலையில், பல நிறுவனங்கள் ஊழியர்களின் நலனிலும் அக்கறை செலுத்துகிறது.
அப்படி உலகின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட், தனது ஊழியர்களின் நலனில் அதிகம் கவனம் செலுத்துவது வழக்கம், பல்வேறு சலுகைகள், வசதிகளை அலுவலகத்திலும், பணியிலும் அளித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவரான அனந்த் மகேஸ்வரி ஊழியர்களை விடுமுறை எடுக்கச் சொல்லி பொதுவெளியிலேயே கோரிக்கை வைத்துள்ளார்.
மைக்ரோசாப்ட் அனந்த் மகேஸ்வரி
மைக்ரோசாப்ட் இந்தியாவின் தலைவர் அனந்த் மகேஸ்வரி தனது டிவிட்டரில், தனது நிறுவன ஊழியர்களைப் பணியில் இருந்து விலகி குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு புத்துணர்வுடன் பணிக்குத் திரும்புங்கள். உங்களின் நலன் மிகவும் முக்கியம் என அனைத்து ஊழியர்களுக்குப் பிரேட் எடுத்துக்கொள்ள நினைவூட்டியுள்ளார் அனந்த் மகேஸ்வரி.
அனந்த் மகேஸ்வரி
48 வயதான மைக்ரோசாப்ட் இந்தியாவின் தலைவர் அனந்த் மகேஸ்வரி செய்த இந்தப் பதிவு இந்நிறுவன ஊழியர்களிடத்தில் மட்டும் அல்லாமல் பிற நிறுவனங்கள் ஊழியர்கள் மத்தியிலும் அதிகளவிலான வரவேற்பு பெற்றுள்ளது.
லாக்டவுன் பணி சுமை
அதிலும் இந்த லாக்டவுன் காலத்தில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தால், ஊழியர்கள் அதிக நேரம் பணியாற்றி வருவதாக வருத்தம் தெரிவித்து வரும் நிலையில் உள்ளது. அதிலும் பெண் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் போது அதிகளவிலான சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நேரத்தில் அனந்த் மகேஸ்வரி டிவீட் வந்துள்ளது.
மைக்ரோசாப்ட்-ன் கொரோனா போனஸ்
மேலும் மைக்ரோசாப்ட் நிர்வாகம் இந்தக் கொரோனா காலத்தில் எவ்விதமான தொய்வும் இல்லாமல் சிறப்பாகப் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் 1500 டாலர் மதிப்பிலான Pandemic Bonus அறிவித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 1.12 லட்சம் ரூபாய், இந்தத் தொகை நடப்பு நிதியாண்டுக்குள் அனைவருக்கும் அளிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
அனைவருக்கும் போனஸ்
இந்த Pandemic Bonus தொகை கார்பரேட் துணைத் தலைவர் பதவிக்குக் கீழ் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் மார்ச் 31, 2021 வர்த்தகப் பிராந்தியங்கள் அடிப்படையில் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்தப் போனஸ் முழு நேர ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் பகுதி நேர ஊழியர்களுக்கும், மணிநேர கணக்கில் பணியாற்றுவோருக்கும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1,75,508 ஊழியர்கள்
அமெரிக்காவின் டெர்மண்ட் பகுதியைத் தலைமையாகக் கொண்டு உலகம் முழுவதிலும் இயங்கி வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 1,75,508 ஊழியர்களை வைத்துள்ளது. இந்த வருடம் செப்டம்பர் 2021 வரையில் அனைத்து ஊழியர்களுக்கும் work from Home கட்டாயமாக்கியுள்ளது.