இன்று உலகம் முழுக்க பரவி வரும் கொரோனாவிற்கு மத்தியில், உலகமே அல்லாடி வருகின்றது எனலாம். இதனால் வல்லரசு நாடான அமெரிக்காவும் பலத்த அடி வாங்கியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் மிக பெரிய டெக் ஜாம்பவனான மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு ஒரு சலுகையினையும் வழங்கியுள்ளது.
ஏற்கனவே கணிசமான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில், நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது.
ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம்
உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு, பல நாடுகளில் தளர்வில்லா லாக்டவுன் போடப்பட்டது. இதனால் உலகின் பல முன்னணி நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வந்தன. ஆனால் தற்போது நிரந்தமாக ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வருகின்றன. இந்த நிலையில், மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட், ஊழியர்கள் விரும்பும் பட்சத்தில் நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா எல்லாவற்றையும் மாற்றிவிட்டது
இது குறித்து மைக்ரோசாப்ட் தரப்பில் கூறுகையில், கொரோனா பெருந்தொற்றானது மக்களின் சிந்தனை, வாழ்க்கை முறை, வேலை என அனைத்தையும் மாற்றிவிட்டது. எனவே, ஊழியர்களின் வசதிக்கேற்ப பணியாற்றும் சூழலை வடிவமைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை
அதேவேளையில், இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், வீட்டில் இருந்தே நிரந்தரமாக பணியாற்ற அனுமதி கொடுக்கப்படுமா?என்பது குறித்து தெளிவாக எதுவும் குறிப்பிடவில்லை. ஏனெனில் அவர் அனைத்து ஊழியர்களையும் வீட்டில் இருந்து பணியாற்ற கூறவில்லை. ஏனெனில் ஊழியர்கள் ஒன்றாக அமர்ந்து வேலை செய்யும்போது கிடைக்கும் பலன்களையும் நாங்கள் அறிவோம் என தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் & டிவிட்டர் WFH
முன்னதாக கூகுள், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சில நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கூற உள்ளதாக தெரிவித்தன. இதே இந்தியாவின் விப்ரோ நிறுவனமும் கூட நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற கூறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அவர்கள் அனைவரும் பிளக்ஸிபிள் முறையில் வீட்டில் இருந்து பணிபுரியலாம் என்று கூறியுள்ளது.