அதிரடி பேச்சுக்கும், அதிரடி முடிவுக்கும் பெயர்போன சத்ய நாடெல்லா 2022 ஆம் ஆண்டிலேயே பல ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து செலவுகளைப் பெரிய அளவில் கட்டுப்படுத்தி தனது சம்பளத்தையும், சம்பள உயர்வையும் காப்பாற்றிக்கொண்டார்.
உலகளவில் பெரிய டெக் நிறுவனங்களாக இருக்கும் கூகுள், ஆப்பிள் ஆகியவை தனது முழு நேர டெக் ஊழியர்களை இதுவரையில் பணிநீக்கம் செய்யாமல் இருக்கும் வேளையில் மைக்ரோசாப்ட் 2வது முறையாகப் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
இதனால் ஒட்டுமொத்த டெக் சேவை துறையும் ஆடிப்போய் உள்ளது, புத்தாண்டு துவக்கத்திலேயே அமேசான் 18000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ள நிலையில், இன்று மைக்ரோசாப்ட் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஆனால் மைக்ரோசாப்ட் சில நாடுகளுக்கு முன்பே இந்தப் பணிநீக்கம் குறித்துச் சிக்னல் கொடுத்துள்ளார்.
சத்ய நாடெல்லா
இந்தியரான சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் 2வது ரவுண்டு பணிநீக்க அறிவிப்பில் சுமார் 11000 ஊழியர்களை இன்ஜினியரிங் மற்றும் HR பிரிவில் இருந்து பணிநீக்கம் செய்ய உள்ளது.
மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் தனது 2வது ரவுண்டு பணிநீக்கத்தில் 5 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த நடவடிக்கை இன்றே துவங்கவும் வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று முதல் Pink Slip
2022 ஆம் ஆண்டுப் பணிநீக்கத்தில் 1000 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 11000 ஊழியர்களுக்கு Pink Slip கொடுக்க உள்ளது மைக்ரோசாப்ட் நிர்வாகம்.
சிக்னல்
அமெரிக்காவின் ரெட்மாண்ட் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மைக்ரோசாப்ட் வாஷிங்டனில் உள்ள பெல்லூவ் பகுதியில் உள்ள 26-அடுக்கு சிட்டி சென்டர் பிளாசா குத்தகை ஒப்பந்தம் ஜூன் 2024 முடிய உள்ள நிலையில் இதைப் புதுப்பிக்க மாட்டோம் என்று மைக்ரோசாப்ட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுவே பெரிய சிக்னல் ஆகப் பார்க்கப்படுகிறது.
டிசம்பர் காலாண்டு முடிவுகள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிடும் முன்பும் அலுவலக மூடல் மற்றும் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள்
மைக்ரோசாப்ட் டிசம்பர் காலாண்டில் ஏற்பட்ட சரிவை சமாளிக்கவே இந்தப் பணிநீக்கத்தை அறிவித்துள்ளதாக முதலீட்டாளர்கள் மத்தியில் பேச்சு உருவாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
கூகுள் மற்றும் ஆப்பிள்
கூகுள் மற்றும் ஆப்பிள் இதுவரையில் தனது கான்டிராக்ட் ஊழியர்களை மட்டுமே பணிநீக்கம் செய்துள்ள வேளையில் முழு நேர டெக் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவில்லை. இதனால் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஆப்பிள் சிஇஓ டிம் குக் அதிகப்படியான சம்பள குறைப்பு, பங்கு வழங்கும் திட்டத்தில் பெரும் மாற்றம் ஆகியவற்றை எதிர்கொண்டனர்.
பணிநீக்க அறிவிப்பு
இந்த நிலையில் சத்ய நாடெல்லா பணிநீக்க அறிவிப்பு, செலவுகள் குறைப்பு ஆகியவற்றை அறிவித்துச் சம்பள குறைப்பில் இருந்து தப்பியுள்ளார். சத்ய நாடெல்லா-வின் முடிவு பற்றி உங்கள் கருத்து என்ன, மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க...
இதேபோல் தற்போதைய கணிப்புச் சரியாக இருந்தால் இந்தியாவில் அதிகளவிலான பணிநீக்கம் இருக்காது..!