வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஐந்து நகரங்களுக்கு புதிய விமானங்களை விமான போக்குவரத்து துறை அமைச்சர் திறந்து வைத்துள்ளார்.
இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து விமானப் போக்குவரத்து தற்போது அதிகம் உள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.
தனியார் விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளையும் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் விமான போக்குவரத்து குறைவாக இருக்கும் நிலையில் தற்போது 5 நகரங்களில் புதிய விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது
விமான போக்குவரத்து
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் விமான போக்குவரத்து தற்போது மீண்டும் எழுச்சி பெற்றது என்பதும் புதிய விமானங்கள் புதிய வழித்தடங்களில் விமானங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு சமீபத்தில் ஏராளமான புதிய விமானங்கள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு மாநிலங்கள்
இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 5 முக்கிய நகரங்களை இணைக்கும் மூன்று விமானங்களை சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா அவர்கள் நேற்று தொடங்கி வைத்தார். நேற்று நடந்த விழாவில் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா அவர்களுடன் வடகிழக்கு மாநில முதலமைச்சர்களான அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங், அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்கமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
4 மாநிலங்கள் 5 நகரங்கள்
வடகிழக்கு இந்தியாவில் உள்ள நகரங்களை இணைக்கும் ஒரு பகுதியாக இந்த விமான போக்குவரத்து புதிதாக தொடங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா அவர்கள் தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள ஐந்து முக்கிய நகரங்களை இணைக்கும் மூன்று விமானங்கள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
3 புதிய வழித்தடங்கள்
இம்பால்-ஐஸ்வால்-இம்பாலை இணைக்கும் விமானம் அக்டோபர் 30 முதல் முதல் வாரத்திற்கு 5 முறை இயக்கப்படும் என்றும், ஷில்லாங்-லிலாபரி-ஷில்லாங்க் இடையே அக்டோபர் 31 முதல் விமான சேவை வாரம் 4 முறை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் லிலாபரி-ஜிரோ-லிலாபரி வழித்தடத்தில் அக்டோபர் 30 முதல் வாரத்திற்கு 2 முறை இயக்கப்படும் என் பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கம்
அலையன்ஸ் ஏர் மூலம் விமானங்கள் இயக்கப்படும் இந்த சேவை காரணமாக வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள நகரங்களில் இருந்து நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் விமான இணைப்பை வழங்கும் தொடக்கமாகும் என்று சிந்தியா வலியுறுத்தினார்.
பயணத்தை எளிதாக்கும்
ஜெனரல் டாக்டர் விஜய் குமார் சிங் அவர்கள் இந்த வழித்தடங்கள் குறித்து கூறுகையில், வடகிழக்கு பிராந்தியத்திற்கு வழங்கப்படும் கூடுதல் விமான இணைப்பு அம்மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை எளிதாக்கும் என்றும், பல்வேறு நோக்கங்களுக்காக பயணிக்கும் மக்களுக்கு உதவும் என்றும் தெரிவித்தார்.