கொரோனா வைரஸால் ஒட்டு மொத்த உலகத்தில் சுமாராக 12.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 69,400 பேர் இறந்தேவிட்டார்கள்.
இந்த கொடிய நோயைக் கட்டுப்படுத்த பல நாட்டு அரசாங்கங்களும், ஷட் டவுன் அறிவித்து இருக்கிறார்கள்.
அதை எல்லாம் தாண்டி பல கோடி பேர் தங்கள் வேலைகளை இழக்க வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த இக்கட்டான சூழலில், ரகுராம் ராஜன் அரசுக்கு ஒரு அலர்ட் கொடுத்து இருக்கிறார். எத்தனை பேர் வேலை இழக்க வாய்ப்பு இருக்கிறது? என்ன அலர்ட் கொடுத்தார் ரகுராம் ராஜன்? வாருங்கள் பார்ப்போம்.
வேலை இழப்பு
சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு (International Labour Organization) கொரோனாவால் சுமாராக 2.5 கோடி பேரின் வேலை பறி போகலாம் எனக் கணித்து இருந்தது. சமீபத்தில் வெளியான மிண்ட் பத்திரிகையின் அறிக்கையில், கொரோனாவால், இந்தியாவில் மட்டும் சுமார் 13.6 கோடி பேரின் வேலைவாய்ப்புகள் ஆபத்தில் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
ரகுராம் ராஜன்
இந்த நேரத்தில், மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் மற்றும் பொருளாதார வல்லுநர் ரகுராம் ராஜனும் 'Perhaps India's Greatest Challenge in Recent Times' என்கிற தலைப்பில் எழுதிய பிளாக்கில் சில திடுக்கிடும் தகவல்களைச் சொல்லி இருக்கிறார். சொல்லப் போனால், சுதந்திரம் பெற்றதில் இருந்து, இந்தியாவின் பொருளாதாரம் இப்படி ஒரு அவசர காலத்தை சந்தித்ததில்லை எனச் சொல்கிறார்.
போதாது
நேரடி பணப் பரிமாற்றம் பெரும்பாலான மக்களைச் சென்று அடையும், ஆனால் எல்லோருக்கும் சென்று அடையாது. இதை பலரும் சொல்லி இருக்கிறார்கள். அதே போல, நேரடி பணப் பரிமாற்றத்தில் கொடுக்கப்படும் சொற்பத் தொகை ஒரு குடும்பத்துக்கு ஒரு மாத காலம் வாழ போதாது. இதற்கு இரண்டு பெரிய எதிர் வினைகள் இருக்கின்றன எனச் சொல்கிறார்.
முதல் எதிர் வினை
தங்கள் சொந்த மாநிலங்களை விட்டு, வேறு மாநிலங்களுக்கு வந்து வேலை பார்க்கும் கடை நிலை ஊழியர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் (Migrant Labours), இந்த கொரோனா பாதிப்பால், மீண்டும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கே திரும்புவது தான் முதல் எதிர்வினை என்கிறார் பொருளாதார வல்லுநர் ரகுராம் ராஜன்.
இரண்டாவது எதிர்வினை
"மக்கள் பிழைப்புக்கு வழி இல்லை என்றால், அவர்கள் லாக் டவுனை எல்லாம் பெரிதாக கண்டு கொள்ளமாட்டார்கள். தங்கள் பிழைப்பை உறுதி செய்ய வேலைக்குச் செல்லத் தொடங்கி விடுவார்கள்" என நெற்றில் அடித்தாற் போல இரண்டாவது எதிர் வினையைச் சொல்லி அலர்ட் செய்து இருக்கிறார் முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன்.
2008 - 09 நெருக்கடி
2008 - 2009 உலக பொருளாதார நெருக்கடி கால கட்டத்தில் மக்களால் வேலைக்குச் செல்ல முடிந்தது, நம் நிறுவனங்கள் கடந்த காலங்களை விட சிறப்பாக செயல்பட்டன, நம் நிதி அமைப்புகள் வலுவாக இருந்தன, அரசின் கஜானாவும் பலமாக இருந்தது. ஆனால் இப்போது கொரோனாவுக்கு எதிராக நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம். இந்த காலத்தில் மேலே சொன்ன எதுவுமே இல்லை எனச் சுட்டிக் காட்டி இருக்கிறார் ரகுராம் ராஜன்.
திட்டமிட வேண்டும்
"ஒருவேளை லாக் டவுன் காலத்துக்குப் பின்பும் வைரஸ் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் எனத் திட்டமிட வேண்டும். மேற்கொண்டு நாட்டை முழுமையாக லாக் டவுன் செய்வது மிகவும் கடினமான ஒன்று, எனவே, கொரோனா அதிகம் பரவாத இடங்களில், தேவையான முன் எச்சரிக்கைகளுடன், சில பொருளாதார நடவடிக்கைகளை எப்படித் தொடங்குவது என யோசிக்க வேண்டும்" எனச் சொல்கிறார் ராஜன்.