2021 - 22 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
பெரும்பாலான வரி செலுத்தும் நபர்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் தங்களுடைய வருமான வரி தாக்கலை செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
இருப்பினும் ஒரு சில காரணங்களால் பலர் இன்னும் வருமான வரி தாக்கல் செய்யவில்லை. அவர்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
வருமான வரி தாக்கல்
2021 - 22 ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிந்து விட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போதிலும் வருமான வரித்துறை அந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இந்த ஆண்டு கால அவகாசம் கிடையாது என ஏற்கனவே அறிவித்திருந்தது. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதுகுறித்த ஹேஷ்டேக் வைரல் ஆன போதிலும் வருமான வரித்துறை ஜூலை 31ஆம் தேதி தான் கடைசி தேதி என உறுதியாக கூறிவிட்டது.
ஒரே நாளில் 65 லட்சம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிந்து நிலையில் ஜூலை 31ஆம் தேதி இரவு 10 மணி வரை ஏறக்குறைய 65 லட்சம் பேர் அன்று ஒரே நாளில் வருமானவரி தாக்கல் செய்துள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக 5 கோடி பேருக்கு மேல் வருமான வரி தாக்கல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடைசி தேதியை தவறவிட்டவர்கள்
இந்த நிலையில் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதியை தவறவிட்டவர்கள் அச்சப்படவோ, பதட்டப்படவோ தேவையில்லை. ஏனெனில் இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை அபராதத்துடன் வருமான வரியை தாக்கல் செய்யலாம். அதற்குள் தாக்கல் செய்துவிட்டால் எந்தவித சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது
அபராதம்
ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு ரூபாய் 5000 அபராதத்துடன் வரி தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு முன்னர் இந்த அபராதம் ரூ.10 ஆயிரமாக இருந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்த அபராதத்தை 5 ஆயிரமாக குறைத்து இருந்தார். அதேபோல் ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் ஈட்டுவோர் கடைசித் தேதிக்கு பின்னர் வருமான வரி தாக்கல் செய்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டுவோர் எந்தவிதமான அபராதமும் இன்றி டிசம்பர் 31-ம் தேதி வரை தாக்கல் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னடைவுகள்
ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு சில பின்னடைவுகள் உண்டு என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். அதாவது தாமதமாக வரி செலுத்துபவர்கள் வரி அளவுக்கு வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்த தேதியிலிருந்து கணக்கிட்டு ஒரு சதவீதம் வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
சட்ட நடவடிக்கை
அதுமட்டுமின்றி ஜூலை 31ம் தேதிக்கு பின்னர் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை முன்னெடுத்து செல்ல முடியாது என்பதும் ஒரு பின்னடைவான தகவல் ஆகும். இருப்பினும் அபராதத்துடன் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்து விட்டால் எந்தவித சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதால் காலம் தாழ்த்தாமல் வருமான வரி தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.