டெல்லி: தொழில்துறை தொடர்பான 'தொழிலாளர் கோட்'க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், இந்திய நிறுவனங்கள், ஊழியர்களை, பணிக்கு சேர்ப்பதிலும், பணியை விட்டு நீக்குவதிலும், புதிய நடைமுறையை கையாள வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு காலகட்டத்திற்கும் ஏற்ப, ஒப்பந்த அடிப்படையில், தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த நிறுவனங்களை அனுமதிக்கிறது.
'நிலையான கால வேலைவாய்ப்பு' (fixed-term employment) என்பது ஒரு தொழிலாளியை, எந்த ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும் பணிக்கு அமர்த்தும் சுதந்திரத்தை நிறுவனங்களுக்கு வழங்குகிறது. மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம், சீசன் மற்றும் ஆர்டர்களைப் பொறுத்து ஊழியர்கள் பணியமர்த்தப்படலாம்.
தொழிலாளர் நல திட்டம்
நிறுவனங்களுக்கு தேவையில்லாத காலகட்டத்திலும், இந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த அவசியம் இருக்காது. அதேநேரம், பிற ஊழியர்களை போலவே, அனைத்து தொழிலாளர் நலத் திட்டங்களும் இவர்களுக்கும் பொருந்தும். பெரும்பாலும் ஜவுளித்துறை சார்ந்த தொழில்களில், இந்த புதிய சட்டத் திருத்தம் பெரும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பணி நீக்கம்
இத்தோடு, தொழிலாளர் சட்டத்தை எளிமைப்படுத்தும் மற்றொரு திட்டத்திற்கும், மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. அதாவது, 100 ஊழியர்களுக்கும் மேல் கொண்ட ஒரு நிறுவனம், தொழிலாளர்களை பெரிய அளவில் பணி நீக்கம் செய்யும்போது, நாடாளுமன்ற அனுமதியை பெற வேண்டும் என்ற விதிமுறை, இன்டர்ஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ் கோட் சட்டத்தில் உள்ளது. இப்போது இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அரசு அனுமதித்தால்போதும்
புதிய திருத்தத்தின்படி, இதுபோன்ற பணியிழப்பு நடவடிக்கைகளின்போது, நாடாளுமன்ற அனுமதியை கேட்க தேவையில்லை. அரசின் அனுமதியை கேட்டால் போதும் என்ற அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் எளிதாக நிறுவனங்களால் இதுபோன்ற அனுமதியை பெற முடியும் என்பதால், நிறுவன உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம், தொழிலாளர் அமைப்புகள், இந்த சட்டத் திருத்தத்திற்கு அதிருப்தி தெரிவித்துள்ளன.
குளிர்கால கூட்டம்
இந்த சட்டத் திருத்தங்கள், நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே, அறிிமுகம் செய்து நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இந்திய நிறுவனங்கள், இனிமேல் பணியாளர்களை பணிக்கு அமர்த்துவது, மற்றும் பணி நீக்கம் செய்யும் நடைமுறைகளில், வித்தியாசம் ஏற்படப்போகிறது.