மத்திய அரசுக்கு சுமார் 44 பில்லியன் டாலர் செலவாகும் இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை நீட்டிப்பதா அல்லது அரசாங்க நிதி மற்றும் உணவு விநியோகத்தில் உள்ள அழுத்தத்தைக் குறைப்பதா என்பது பிரதமர் நரேந்திர மோடி கையில் தான் உள்ளது.
கொரோனா தொற்றுக் காலத்தில் முறையாகக் கட்டுப்பாடுகளை விதிக்காமலும், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமலும் இருந்ததால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில், பல கோடி பேர் வேலைவாய்ப்புகளையும் இழந்தனர்.
இந்த நிலையில் வருமானம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் மோடி அரசு பொது விநியோக கடைகள் மூலம் இலவசமாகப் பொருட்களை வழங்கியது.
கோதுமை அல்லது அரிசி
2020 ஏப்ரல் முதல் ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் 800 மில்லியன் இந்தியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசியை மோடி அரசு வழங்கி வருகிறது. கொரோனா காலத்தில் துவங்கப்பட்ட இத்திட்டம் வருகிற செப்டம்பர் மாத இறுதியில் முடிய உள்ளது.
நிதி அமைச்சகம்
நிதி அமைச்சகம் திட்டத்தை நீட்டிப்பதற்கு ஆதரவாக இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து பாதிக்கப்பட்டு வரும் பட்ஜெட் பற்றாக்குறையை இந்த இலவச உணவுப் பொருட்கள் திட்டம் பெரிய அளவிலான பாதிப்புக்குளாக்கிறது என்பது நிதியமைச்சகத்தின் கருத்து.
பிரதமர் மோடி
இந்த நிலையில் பிரதமர் மோடி இத்திட்டத்தை நீட்டிப்பதா அல்லது முடிவுக்குக் கொண்டு வருவதா என்பதை முடிவு செய்வார். இதேபோல் இத்திட்டத்தைப் பண்டிகை காலம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் முடியும் வரை அதாவது அடுத்த ஒரு காலாண்டிற்கு இலவசங்களைத் தொடர்வது போன்ற விவாதங்களும் நடைபெற்று வருகிறது.
குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல்
மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தால், குஜராத்தில் ஆட்சியைத் தக்கவைக்க அவரது பாரதிய ஜனதா கட்சி முயன்று வருகிறது. இதனால் இலவச உணவு திட்டத்தை நிறுத்துவது மோடிக்கு எளிதான காரியமில்லை.
பணவீக்கம்
இந்தியாவில் பணவீக்கம் பெரிய அளவில் பாதிக்காததற்கு இதுவும் காரணமாக விளங்குகிறது, இந்தியாவில் பெரும் பகுதி மக்களுக்கு முக்கியத் தேவைகளை இத்தகைய இலவச திட்டங்கள், அல்லது மானியத்தில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் மூலம் பெறப்படும் காரணத்தால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் மோசமாகாமல் தடுக்கிறது.
70,000 கோடி ரூபாய்
இந்த இலவச உணவு திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குத் தொடர வேண்டும் என்றால் மத்திய அரசுக்கு 700 பில்லியன் ரூபாய் செலவாகும். மத்திய நிதியமைச்சகம் நிதிப் பற்றாக்குறையை 6.9 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு வரும் நிலையில் இந்த 70000 கோடி ரூபாய் என்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.