உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் நிதியியல் தடைகளை விதித்த நிலையில், இந்தியா மட்டும் ரஷ்யா உடனான நீண்ட கால நட்பை முக்கியமானதாகக் கருதி எவ்விதமான தடையும் விதிக்கவில்லை. இதன் மூலம் மேற்கத்திய நாடுகளின் தடை விதிக்கும் கூட்டணியில் இருந்து இந்தியா ஒதுங்கியது.
இந்நிலையில் இந்தியா ரஷ்யா உடன் முன்பை விடவும் அதிகமாக வர்த்தகம் செய்ய முடிவு செய்து உள்ளது. இதற்காக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் புதிய திட்டத்தைத் தீட்டி வருகிறது.
swift பேமெண்ட் முறை தடை
ரஷ்யா மீது தடை விதித்த நாடுகளின் நிறுவனங்கள், அமைப்புகள் மட்டுமே வர்த்தகமோ, முதலீடோ செய்யக் கூடாது. ஆனால் ரஷ்யா மீது தடை விதிக்காத நாடுகள் அனைத்து விதமான வர்த்தகத்தையும் முதலீட்டையும் செய்ய முடியும். ஆனால் தற்போது மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுக்கு swift பணப் பரிமாற்ற முறையைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இது ரஷ்யா மீது தடை விதிக்காத இந்தியா, சீனாவுக்கும் பொருந்தும்.
ரிசர்வ் வங்கி
இந்நிலையில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து, ரஷ்ய நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய மாற்று நிதி பரிமாற்ற வழிகளைக் கண்டறியும் பணிகளைச் செய்து வருகிறது. இதன் மூலம் இந்தியா - ரஷ்யா மத்தியிலான வர்த்தகம் தொடர்வது மட்டும் அல்லாமல் நிதி பரிமாற்றமும் எவ்விதமான தடையுமின்றி இரு நாடுகள் மத்தியில் வர்த்தகம் நடைபெறும்.
சிறிய வங்கிகள்
உலக நாடுகள் ரஷ்யாவின் முன்னணி வங்கிகளை மட்டுமே குறிவைத்து தடையை விதித்துள்ளது, இந்நிலையில் தடை விதிக்கப்படாத சிறிய வங்கிகளைப் பயன்படுத்தி ரூபாய் ரூபிள் நாணய பரிமாற்றம் மற்றும் 3ஆம் நாட்டுப் பேமெண்ட்களைச் செய்வதற்கான வழிகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கண்டறிந்து வருகிறது என இரு பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு
இதற்காக மத்திய அரசின் பொருளாதார விவகார அமைச்சகம், நிதியியல் சேவைத் துறை, வர்த்தகத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் இணைந்து உலக நாடுகளில் ரஷ்யா மீதான தடையில் இருந்து தப்பித்து ரஷ்ய நிறுவனங்களுடன் எப்படி வர்த்தகம் செய்ய முடியும், எப்படிப் பேமெண்ட்-ஐ முடிக்க முடியும் எனத் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
இந்தியா - ரஷ்யா வர்த்தகம்
2021ஆம் நிதியாண்டில், ரஷ்யாவிற்கான இந்திய ஏற்றுமதி 2.6 பில்லியன் டாலராக இருந்தது, இறக்குமதி 5.5 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது இரு தரப்புப் பேமெண்ட் நிலுவை 400 முதல் 500 மில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இறக்குமதியில் ராணுவ ஆயுதங்கள் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
மருந்து மற்றும் எலக்ட்ரிக் பொருட்கள்
இந்தியாவில் இருந்து சுமார் 469 மில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்துப் பொருட்களையும், 301 மில்லியன் டாலர் மதிப்புள்ள மின்சார இயந்திரங்களையும் ரஷ்யாவுக்கு இந்திய நிறுவனங்கள் 2021ஆம் நிதியாண்டில் அனுப்பியுள்ளது.
2022நிதியாண்டு வர்த்தகம்
இதைத் தொடர்ந்து தேநீர், காபி, ஆடை மற்றும் ஜவுளி ஆகியவை அடங்கும். ஏப்ரல் 2021 முதல் ஜனவரி 2022 வரையில், ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி $2.99 பில்லியனாக இருந்தது, இது கடந்த வருடத்தை விடவும் 25 சதவீதம் அதிகமாகும்.