2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய நிதியமைச்சகம் விறுவிறுப்பாகத் தயாராகிக்கொண்டு இருக்கும் வேளையில், மத்திய அரசு இந்தியாவில் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யத் தனி மசோதாவை வெளியிடத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா மூலம் எந்தெந்த டிஜிட்டல் கரன்சியைத் தடை செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது மத்திய அரசு.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு பிட்காயின் மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அமெரிக்க அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகத்தையும், பரிமாற்றங்களையும் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் முக்கியமான கிரிப்டோகரன்சியைத் தடைய செய்யப் புதிய மசோதாவை வெளியிட மத்திய அரசு தயாராகியுள்ளது.
தங்கம் Vs கிரிப்டோகரன்சி
2020ல் தங்கத்திற்கு இணையான முதலீட்டை ஈர்த்த கிரிப்டோகரன்சி ஜனவரி மாதத்தில் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது. இந்தப் பாதிப்பின் காரணமாகக் கிரிப்டோகரன்சி சந்தையில் மிக முக்கியமான வர்த்தகப் பொருளாகக் கருதப்படும் பிட்காயின் மதிப்பு பெரிய அளவில் சரிந்து முதலீட்டாளர்கள் அதிகளவிலான நஷ்டத்தை அடைந்தது.
பட்ஜெட் தாக்கல்
பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கையில் கிரிப்டோகரன்சி மீதான வர்த்தகத் தளர்வு குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது முக்கியமான கிரிப்டோகரன்சி அனைத்தையும் தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
மேலும் பட்ஜெட் தாக்கலுக்குப் பின் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி தடை குறித்த மசோதா நாடாளுமன்ற ஒப்புதலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் கரன்சி தடை
தற்போது வெளியான தகவல்கள் படி இந்த மசோதாவில் பிட்காயின், எதிரியம், ரிப்பிள், போன்ற முன்னணி கிரிப்டோகரன்சியும் தடை செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. டிஜிட்டல் கரன்சி மீதான வர்த்தகம் குறித்து ரிசர்வ் வங்கி வெயிட்டுள்ள The Cryptocurrency and Regulation of Official Digital Currency 2021 மசோதாவிலும் தனியார் டிஜிட்டல் கரன்சியான பிட்காயின், எதிரியம், ரிப்பிள் ஆகியவற்றையும் தடை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
புதிய கிரிப்டோகரன்சி
மேலும் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசும் இணைந்து ரூபாய் மதிப்பிலான புதிய கிரிப்டோகரன்சியை உருவாக்கும் முடிவில் இறங்கியுள்ளது. சந்தையில் பல கிரிப்டோகரன்சி இருந்தாலும் அதன் மீதான ஆபத்துக் காரணிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசே புதிய கிரிப்டோகரன்சி உருவாக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது.