மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலைவாசி குறைக்கவும், நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி சீரடைய இன்று பல முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
Recommended Video
இதில் முக்கியமாக விலைவாசி உயர்வுக்கு அடிப்படை காரணமாக இருக்கும் பெட்ரோல், டீசல் முதல்.. சமையல் சிலிண்டர் மானியம், சுங்க வரி குறைப்பு, விவசாய உரம் வரையில் பல முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார் நிர்மலா சீதாராமன்.
பணவீக்கம்
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றிய நாளில் இருந்து எங்கள் அரசு ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணித்துள்ளோம். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இதன் விளைவாக, எங்களது ஆட்சிக் காலத்தில் சராசரி பணவீக்கம் முந்தைய அரசை காட்டிலும் குறைவாகவே உள்ளது.
முக்கிய பாதிப்புகள்
இன்று உலக நாடுகள் மிகவும் மேசமான சூழ்நிலையில் உள்ளது கொரோனா தொற்றிலிருந்து சர்வதேச பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், உக்ரைன் போர், பொருட்களின் விநியோகச் சங்கிலி பிரச்சனைகள், மூலப்பொருட்கள் பற்றாக்குறை என பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் பல நாடுகளில் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது.
இந்தியா
கொரோனா தொற்று காலத்தில் ஏழை மக்களின் நலனுக்காக PM Garib Kalyan Anna Yojana திட்டம் செயல்படுத்தப்பட்டு உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றது. உலக நாடுகளில் உணவு பொருட்களுக்கு அதிகப்படியான நெருக்கடி இருந்தாலும் இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களுக்கு எவ்விதமான பற்றாக்குறையும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் தெரிவித்தார்.
விவசாய உர மானியம்
உலகளவில் விவசாய உரங்களின் விலை உயர்ந்த வேளையில் பட்ஜெட்டில் விவசாய உர மானியத்தின் 1.05 லட்சம் கோடி ரூபாயுடன் கூடுதலாக 1.10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு விலைவாசி உயர்வில் இருந்து விவசாயிகளை அரசு பாதுகாத்து உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கபட உள்ளது. இதன் மூலம் ரீடைல் சந்தையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார்.
மாநில அரசுக்குக் கோரிக்கை
அனைத்து மாநில அரசுகளையும், குறிப்பாகக் கடந்த நவம்பர் 2021 வரி குறைக்கப்படாத மாநிலங்களையும், இதேபோன்ற வரி குறைப்பை அமல்படுத்தி, சாமானிய மக்களின் சுமையைக் குறைக்க வலியுறுத்துவதாக நிர்மலா சீதாராமன் மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
200 ரூபாய் மானியம்
மேலும், இந்த ஆண்டு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் 9 கோடி பயனாளிகளுக்கு ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு (12 சிலிண்டர்கள் வரை) 200 ரூபாயை மானியமாக வழங்குவோம். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 6,100 கோடி ரூபாய் அளவிலான வருவாய் அரசுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் மீதான சுங்க வரி
இந்திய இறக்குமதி பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் மற்றும் இடை பொருட்கள் மீதான சுங்க வரியையும் குறைக்கிறோம். இதன் மூலம் உற்பத்தி பொருட்களின் விலை பெரிய அளவில் குறையும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இரும்பு & ஸ்டீல் சுங்க வரி
அதேபோல், இரும்பு மற்றும் ஸ்டீல் மூலப்பொருட்கள் மற்றும் இடை பொருட்கள் விலையைக் குறைப்பதற்காகச் சுங்க வரி விதிப்பை மறுசீரமைப்பு செய்ய உள்ளோம்.
சில முக்கியமான ஸ்டீல் உற்பத்தி மூலப்பொருட்களான இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டும், உற்பத்தி செய்யப்பட்ட ஸ்டீல் பொருட்களுக்கு ஏற்றுமதி வரி அதிகரிக்கப்பட உள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சிமெண்ட்
இந்தியா முழுவதும் சிமெண்ட் பற்றாக்குறை இல்லாமல் போதுமான அளவிற்குக் கிடைக்கும் வரையில் இப்பிரிவு லாஜிஸ்டிக்ஸ் மேம்படுத்தப்பட்டு, சிமெண்ட்-ஐ குறைவான விலைக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.