இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய அதிகப்படியான தொழிற்சாலைகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ள நிலையில் மின்சாரத் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்த மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்க நிலக்கரி மூலம் இயங்கும் அனல் மின்நிலையத்தை அதிகரிக்கலாம், ஆனால் இதன் மூலம் ஏற்படும் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் அதிகம். இதற்கு ஏற்றார் போல் இந்திய அரசு நெட் ஜீரோ இலக்கையும் நிர்ணயம் செய்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் மின்சாரம் உற்பத்தியை அதிகரிக்கத் தற்போது இருக்கும் முக்கியமான வழி அணுசக்தி உலைகள் தான். இதை உணர்ந்த மத்திய அரசு சுமார் 6 அணுசக்தி உலைகளை மகாராஷ்டிராவில் அமைக்க உள்ளது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மகாராஷ்டிரா-வில் ஜெய்தாபூர் பகுதியில் சுமார் 1650 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 6 அணுசக்தி உலைகளை அமைக்கக் கொள்கையளவில் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த அணுசக்தி உலைகளைப் பிரான்ஸ் நாட்டுடன் தொழில்நுட்ப கூட்டணியில் அமைக்க உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
9,900 மெகாவாட் மின்சாரம்
இத்திட்டம் இறுதி ஒப்புதல் பெற்று சாத்தியப்படுத்தப்பட்டால் இந்தியாவிலேயே அதிகம் அணுசக்தி மின்சாரம் தயாரிக்கும் தளமாக மகாராஷ்டிரா-வின் ஜெய்தாபூர் விளங்கும், இந்த 6 அணுசக்தி உலைகள் மூலம் சுமார் 9,900 மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்க முடியும் அணுசக்தி அமைச்சகத்தின் ஜிதேந்திர சிங் லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் உடன் பேச்சுவார்த்தை
தற்போது மத்திய அரசு பிரான்ஸ் நாட்டு உடன் தொழில்நுட்ப மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அணுசக்தி அமைச்சகத்தின் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் அணுசக்தியை ஹெல்த்கேர், விவசாயம் போன்ற பல துறையில் வளர்ச்சி திட்டத்திற்காகப் பயன்படுத்தவும் திட்டமிட்டபட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டர்
மருத்துவத் துறையில் அணுசக்தியை பயன்படுத்த பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டர் அமைப்பு ரோடியோபார்மா பொருட்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை ஆய்வு செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளது. அனைத்து ரோடியோபார்மா பொருட்களையும் மக்களின் மருத்துவச் சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் முன் பரிசோதனை செய்து ஒப்புதல் பெற்று தான் அனுமதிக்கப்படும் எனவும் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ரோடியோபார்மா பொருட்கள்
இதேபோல் ரோடியோபார்மா பொருட்களைப் பெரிய அளவில் உற்பத்தி செய்வதற்கான ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு, ஆய்வு ஆகிய முக்கியமான பணிகளை Board of Radiation and Isotope Technology (BRIT) அமைப்பு செய்யும் எனவும் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
விவசாயத் துறை
மேலும் விவசாயத் துறையில் மத்திய அரசின் கீழ் இருக்கும் BARC அமைப்புக் காமா கதிர்களைக் கொண்டு சுமார் 49 விதை வகைகளை உருவாக்கி விவசாயம் செய்யத் தயாராக உள்ளது. இப்படிப் பல பிரிவுகளில் அணுசக்தியை மருத்துவம் மற்றும் விவசாயத் துறையில் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஜிதேந்திர சிங் லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.