இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டு திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவிலும் தற்போது அதிகப்படியான பணவீக்கம், விலைவாசி உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை, திடீரென வட்டி விகிதம் உயர்வு எனப் பல பிரச்சனைகள் அடுத்தடுத்து உருவாகியுள்ளது.
இதனால் மத்திய அரசு, மாநில அரசுக்கு முக்கியமான அறிவிப்பை எச்சரிக்கை உடன் விடுத்துள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களின் செயல்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதிகரித்து வரும் கடன் சுமை மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கைக்கு இணையாகப் பெரிய மாநிலங்கள் பலவை இந்தியாவில் இருக்கும் காரணத்தால் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நிதி ஆரோக்கியம்
மாநிலங்களின் நிதி ஆரோக்கியம் குறித்து அதிகரித்து வரும் கவலைகளைச் சரி செய்ய விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்ட முதல் அறிவிப்பாக இவை விளங்குகிறது.
மாநிலத்தின் நிதி நிலை
கடந்த வாரம் தர்மசாலாவில் நடந்த முக்கியமான கூட்டத்தில் அனைத்து மாநிலத்தின் தலைமைச் செயலாளர்கள் தத்தம் மாநிலத்தின் நிதி நிலை குறித்த அறிக்கை வெளியிட்டனர். இதன் மூலம் மத்திய அரசு எந்த மாநிலத்திற்கு அதிகப்படியான கடன் வைத்துள்ளது என்ற தகவல் உள்ளது. இது கையை மீறி செல்வதற்குள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நரேந்திர மோடி
ஏப்ரல் மாதம் பல அரசு உயர் அதிகாரிகள் பங்குபெற்ற கூட்டத்தில் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் ஜனரஞ்சக திட்டங்கள் மற்றும் இலவசங்கள் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில். இந்தப் போக்குக் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், சில மாநிலங்கள் பணப்பற்றாக்குறையில் சிக்கியுள்ள இலங்கை அல்லது கிரீஸ் வழியில் செல்லும் என்று எச்சரித்தார்.