டெல்லி: சில தினங்களுக்கு முன்பு தான், மூடிஸ் நிறுவனம் இந்தியாவுக்கு கொடுத்து இருந்த ஸ்டேபிள் என்கிற தரத்தில் இருந்து நெகட்டிவ் என தரத்தைக் குறைத்தது. இப்போது இந்தியாவைத் தாண்டி, இந்தியாவின் 21 முன்னணி நிறுவனங்களுக்கும் தரத்தைக் குறைத்து இருக்கிறது.
எஸ்பிஐ, ஹெச் டி எஃப் சி பேங்க், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், பாரத் பெட்ரோலியம், என் டி பி சி, என் ஹெச் ஏ ஐ, கெயில் என பல நிறுவனங்களுக்கு மேலே சொன்னது போல ஸ்டெபிள் என்கிற தரத்தில் இருந்து நெகட்டிவ் தரத்துக்கு குறைத்து இருக்கிறது.
அதே போல மற்ற நிதி நிறுவனங்களான எக்ஸிம் பேங்க், ஹீரோ ஃபின் கார்ப், ஹுட்கோ, இந்தியன் ரயில்வே ஃபனான்ஸ் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்களின் தரத்தையும் குறைத்து இருக்கிறார்கள். அதே போல, கனரா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், சிண்டிகேட் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற முன்னணி வங்கிகளுக்கும் தரத்தைக் குறைத்து இருக்கிறார்கள்.
நிதி அல்லாத நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், ஆயில் இந்தியா, ஓ என் ஜி சி, பெட்ரோநெட் எல் என் ஜி, இன்ஃபோசிஸ், டி சி எஸ் போன்ற நிறுவனங்களையும் ஸ்டேபிள் என்கிற தரத்தில் இருந்து நெகட்டிவ் தரத்துக்கு குறைத்து இருக்கிறார்கள்.
மற்ற படி அதானி க்ரீன், பவர் க்ரிட், அதானி டிரான்ஸ்மிஷன் போன்ற நிறுவனங்களுக்கும் மூடிஸ் நிறுவனம் தரத்தைக் குறைத்து இருக்கிறது. இதில், மேலே சொன்ன நிதி நிறுவனங்களின் தரத்தை அடுத்த 12 - 18 மாதங்களில் ஆய்வு செய்து மீண்டும் தரத்தை உயர்த்த வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறது.
மூடிஸ் நிறுவனம், இந்தியாவின் தரத்தையும், இந்தியாவில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களின் தரத்தையும் குறைத்ததால் மட்டுமே நேற்று (நவம்பர் 08, 2019, வெள்ளிக் கிழமை) சென்செக்ஸ் 330 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்தது. இந்த தர இறக்கத்தைக் குறித்து மத்திய அரசு விளக்கம் கொடுத்து இருந்தாலும், நேற்று, சந்தை முதலீட்டாளர்கள், அதை காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. எனவே வரும் திங்கட்கிழமையும், சென்செக்ஸ் ஏற்றம் காண்பது கொஞ்சம் சந்தேகமாகத் தான் இருக்கிறது.