இந்தியப் பொருளாதாரம் கடந்த ஒரு வருட காலமாக பலத்த அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த சிக்கல் எல்லாம் கடைசியாக ஜிடிபி வளர்ச்சிக் குறியீட்டில் தான் வந்து பிரதிபலித்துக் கொண்டு இருக்கின்றன.
கடந்த இரண்டு காலாண்டாக (ஜூன் 2019 மற்றும் செப்டம்பர் 2019), இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி, முறையே 5 சதவிகிதம் மற்றும் 4.5 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டிருக்கிறது.
இப்போது இந்த 2019 - 20 முழு நிதி ஆண்டுக்கே இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி வெறும் 4.9 சதவிகிதம் தான் வளரும் எனக் கணித்து சொல்லி பிரதமர் மோடியை மூட் அவுட் ஆக்கி இருக்கிறது Moody's
கணிப்பு
இந்த 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவிகிதமாக வளரலாம் எனச் சொல்லி இருந்த Moody's, இப்போது 4.9 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி காணும் என தன் கணிப்பைக் குறைத்து இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக இந்தியர்களின் நுகர்வுச் சரிவைச் சுட்டிக் காட்டுகிறது Moody's.
ஆபத்து
அதோடு, இந்தியப் பொருளாதாரம் கடந்த இரண்டு காலாண்டாக நல்ல வளர்ச்சி காணாததால், இந்திய வங்கிகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்து இருக்கிறது. எப்படி..? இந்தியப் பொருளாதார வளர்ச்சி சரிவு காரணமாக, மக்களின், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் குறையலாம். எனவே சில்லறை கடனின் தரம் குறையலாம் என எச்சரித்து இருக்கிறது Moody's.
தனியார் வங்கிகள்
குறிப்பாக தனியார் வங்கிகள் தான், மக்களுக்கு அதிகம் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன் (பர்சனல் லோன்) என்கிற பெயரில் நிறைய சில்லறைக் கடன்களைக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த கடன்களை திருப்பி வசூலிப்பது கொஞ்சம் சிரமமான வேலையாக அமையலாம். எனவும் தனியார் வங்கிகளை ஸ்பெஷலாக எச்சரித்து இருக்கிறது Moody's.
மந்த நிலை காரணங்கள்
இந்தியப் பொருளாதார மந்தநிலை, முதலீடுகள் குறைந்ததால் வந்தது. இப்போது அந்த முதலீடுகள் சரிவைத் தொடர்ந்து நுகர்வுக்குப் பரவி, நுகர்வுச் சரிவாக மாறி இருக்கிறது. அதோடு கிராம புறங்களில் நிலவும் நிதி நெருக்கடி (கிராம மக்கள் கையில் பணம் இல்லாதது), கிராம மக்களுக்கான வேலை வாய்ப்புகள் சரிவது போன்றவைகள் தான் இந்திய பொருளாதார மந்த நிலையை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறது மூடிஸ்.
என் பி எஃப் சி
இது போக, என் பி எஃப் சி (NBFC - Non Banking Financial Companies) என்றழைக்கப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதார மந்த நிலையை மேலும் மோசமாக்கி இருக்கின்றன. இந்த என் பி எஃப் சி தான், கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்தில் நிறைய பேருக்கு கடன் கொடுத்து இருக்கின்றன.
என் பி எஃப் சி செயல்பாடு
இந்த என் பி எஃப் சி நிறுவனங்கள், பொதுவாக ஒரு நிறுவனத்திடம் இருந்து குறைந்த வட்டிக்கு கடன் வாங்குவார்கள். குறைந்த வட்டிக்கு கடன் வாங்கிய பணத்தைத் தான், மற்றவர்களுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பார்கள். உதாரணமாக 9% கடன் வாங்கி 15 சதவிகிதத்துக்கு கடன் கொடுத்தால் 6% லாபம். இது தான் என் பி எஃப் சி நிறுவனங்களின் வியாபாரம்.
நிதி நெருக்கடி
இப்போது என் பி எஃப் சி நிறுவனங்கள் கொடுத்த கடன்களை திருப்பி வசூலிக்க முடியாமல் தவிக்கிறார்கள். எனவே
1. புதிதாக மேற்கொண்டு கடன் கொடுக்க பணம் இல்லை.
2. என் பி எஃப் சி நிறுவனங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. எனவே கடுமையான நிதி நெருக்கடி நிலவிக் கொண்டு இருக்கிறது.
கடன் வளர்ச்சி
இந்தியாவில் கடன் கொடுக்கும் நடவடிக்கை அதிகரிக்கவில்லை என்றால், இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபியும் வளர்ச்சி காண்பது சாத்தியமில்லை எனச் சொல்லி இருக்கிறது மூடிஸ். எனவே என் பி எஃப் சி மற்றும் மக்களின் வருமானம் இரண்டுமே பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாகிறது.
அடுத்த வருடம்
அடுத்த 2020 - 21 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம், சுழற்சி (Cyclical) ரீதியாக ஓரளவுக்கு மேம்படலாம். ஆனால் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டை விட கொஞ்சம் பலவீனமாக இருக்கலாம் எனவும் சொல்லி, ஒட்டு மொத்த மத்திய அரசின் மூடையும் கெடுத்து இருக்கிறது Moody's.