உலகின் மிக முக்கியப் பொருளாதார நாடாக விளங்கும் இந்தியாவில் கொரோனா 2வது அலை பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
தினமும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 2 நாட்களாகத் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு டெஸ்ட் செய்யப்படும் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளதே காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் தற்போது பல மாநிலங்கள் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியும், இதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் மக்களின் வேலைவாய்ப்புகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு உருவாகியுள்ளது.
முழு ஊரடங்கு நடவடிக்கை
மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் கேரளா மே 8ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு நடவடிக்கையை அமலாக்கம் செய்ய முடிவு செய்து அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இதற்கான ஆலோசனையில் உள்ளது.
உற்பத்தி, சேவை, ரீடைல் துறைகள்
இந்தச் சூழ்நிலையில் முழு ஊரடங்கு அமலாக்கம் செய்யப்பட்டால் வீட்டில் இருந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளவர்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை. ஆனால் உற்பத்தி, சேவை, ரீடைல் ஆகிய துறையில் பணியாற்றுபவர்கள் கட்டாயம் வேலை செய்யும் இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதால் இந்த முழு ஊரடங்கு மூலம் இவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.
வெளிமாநில ஊழியர்கள்
கொரோனா முதல் அலையில் தாக்கத்தில் இருந்து இந்திய மீண்டு வரும் இந்தச் சூழ்நிலையில் 2வது அலை ஏற்பட்டு உள்ள காரணத்தால், உற்பத்தி சந்தை முதல் வேலைவாய்ப்பு சந்தை வரையில் அனைத்தும் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் வெளிமாநில ஊழியர்கள் இதனால் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நாடு முழுவதும் லாக்டவுன்
மத்திய அரசு கடந்த ஆண்டு, நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது நீண்ட காலம் வேலையில்லாமல் வெளிமாநில ஊழியர்கள் டெல்லியில் தங்கியிருந்த நிலையில் உணவு, பணம், வீட்டு வாடகை எனப் பல கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டனர். இதனால் தற்போது முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்ட முதல் வாரத்திலேயே சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
ரயில் போக்குவரத்து
மேலும் ரயில் போக்குவரத்துத் தற்போது இயங்கும் காரணத்தால் வெளிமாநில ஊழியர்கள் கடந்த முறை நடந்து சென்று பல இன்னல்களை அனுபவித்த பாடத்தின் காரணமாகத் தற்போது முன்கூட்டியே சொந்த ஊருக்குச் செல்ல துவங்கியுள்ளனர்.
வேலைவாய்ப்பின்மை விகிதம்
இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குப் பின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி வளர்ச்சி அடையத் துவங்கிய காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்து கடந்த 3 மாதங்களாகத் தொடர்ந்து 6 சதவீதத்திலேயே நிலைகொண்டு இருந்தது.
ஏப்ரல் மாதத்தில் அதிர்ச்சி
ஆனால் ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று உச்சத்தை அடையத் துவங்கிய காரணத்தால் மார்ச் மாதத்தில் 6.5 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் தடாலடியாக 7.97 சதவீதமாக உயர்ந்துள்ளது.
70 லட்சம் பேர் வேலை இழப்பு
இதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 மாத உயர்வை அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் கிட்டதட்ட 8 சதவீதத்தை அடைந்துள்ளது. இதன் வாயிலாக ஏப்ரல் மாதம் மட்டும் நாடு முழுவதும் சுமார் 70 லட்சம் பேர் வேலையை இழந்து தவித்து வருவதாக CMIE அமைப்பு தெரிவித்துள்ளது.
வகைப்படுத்தாத துறையில் பாதிப்பு அதிகம்
இந்த 70 லட்சம் வேலைவாய்ப்பு இழப்பு என்பது வகைப்படுத்தப்பட்ட துறையைச் சார்ந்தது. இந்தியாவின் பெரும் பகுதி வேலைவாய்ப்பு வகைப்படுத்தாத துறையைச் சார்ந்து இருக்கும் காரணத்தால், வகைப்படுத்தாத துறையில் வேலையை இழந்தோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
மே மாதமும் தொடரும்
இந்தியாவிற்கு இன்னும் போதுமான தடுப்பு மருந்து, அக்சிஜன் விநியோகம் ஆகியவை கிடைக்காத காரணத்தால் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவது என்பது பெரிய சவாலாகவே உள்ளது. இந்தச் சூழ்நிலையில் மே மாதமும் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் என்று CMIE அமைப்பின் நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார்.