உலக நாடுகளில் கடந்த இரண்டு வருடத்தில் கொரோனாவுக்கு அடுத்து மிகப்பெரிய பிரச்சனையாகப் பார்க்கப்பட்டது சிப் தட்டுப்பாடு தான். இந்தத் தட்டுப்பாடு வரும் காலத்திலும் இருக்கும் என்பதால் இந்தியாவில் பல நிறுவனங்கள் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
Recommended Video
இந்நிலையில் சென்னையில் நாட்டின் முன்னணி நிறுவனம் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையை நிறுவ உள்ளது.
டாடா, வேதாந்தா
ஏற்கனவே டாடா, அனில் அகர்வாலின் வேதாந்தா போன்ற நிறுவனங்கள் இத்துறையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் பிரம்மாண்டமாகச் செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைக்க 300 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியுள்ளது மதர்சன் சுமி.
சம்வர்தனா மதர்சன் சுமி குரூப்
இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமமான சம்வர்தனா மதர்சன் சுமி குரூப் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் இறங்க உள்ளது. இதற்காக உலக நாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்களின் கூட்டணியைத் தேடி வருகிறது.
செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை
சம்வர்தனா மதர்சன் சுமி குரூப் ஏற்கனவே சுமார் 29 கூட்டணி நிறுவனத்தை உருவாக்கி இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகத்தை உருவாக்கியுள்ள நிலையில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கச் சென்னைக்கு அருகில் சுமார் 300 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியுள்ளது.
7500 கோடி ரூபாய் முதலீடு
இத்திட்டத்திற்காக அடுத்த 3 வருடத்தில் சம்வர்தனா மதர்சன் சுமி குரூப் சுமார் 7500 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்யத் தயாராகியுள்ளது. இந்நிலையில் இத்துறையில் தனியாக இறங்காமல் இத்துறையில் சிறந்து விளங்கும் வெளிநாட்டு நிறுவனத்தின் கூட்டணியைத் தேடி வருவதாகச் சம்வர்தனா மதர்சன் சுமி நிறுவனத்தின் துணைத் தலைவர் லக்ஷ் வாமன் சேகல் தெரிவித்துள்ளார்.
சிப் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி
இந்தியாவில் சிப் உற்பத்தி மற்றும் அதன் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு மிக முக்கியமான கடந்த ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் சிப் தட்டுப்பாடு காரணமாக அதிகப்படியான வருவாயை இழந்துள்ளது தான்.
சென்னைக்கு ஜாக்பாட்
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைகள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், எல்கட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் மதர்சன் சுமி குரூப் சென்னையில் சிப் தொழிற்சாலையை அமைப்பது மிகவும் சரியான முடிவாகப் பார்க்கப்படுகிறது.
மதர்சன் சுமி
இதேபோல் சிப் ஏற்றுமதிக்கும் சென்னை மிகவும் சரியான இடமாக இருக்கும். இந்தியாவில் 2020-2026 வரையிலான காலகட்டத்தில் சிப் தேவை என்பது வருடாந்திர அளவில் 33 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் மூலம் மதர்சன் சுமி சென்னை தொழிற்சாலைக்கு இந்திய வர்த்தகமும் கிடைக்கும்.