உலகத்தையே தன் இரும்புப் பிடிக்குள் கொண்டு வந்திருக்கும் கொரோன வைரஸ், சிறு குறு தொழில்முனைவோர்கள் என்று அழைக்கப்படும் MSME-யினர்களின் லாபத்தில் 1.2 லட்சம் கோடி ரூபாயை குறைய வாய்ப்பு இருப்பதாக தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை வழியாகச் சொல்லி இருக்கிறது.
இன்னும் சில முக்கியமான விஷயங்களையும், சிறு குறு தொழில்முனைவோர்கள் தரப்பில் இருந்து சில கோரிக்கைகளையும் இந்த அமைப்பினர்கள் முன் வைத்திருக்கிறார்கள்.
அப்படி என்ன சொல்லி இருக்கிறார்கள்? என்ன மாதிரியான கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள் என்பதை உள்ளே கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
அமைப்பு விவரங்கள்
Global Alliance of Mass Entrepreneurship (Game) என்கிற அமைப்பு தான் மேலே சொன்ன அதிர்ச்சிகரமான விஷயத்தை மத்திய அரசுக்குச் சொல்லி இருக்கிறது. இந்த அமைப்பை, முன்னாள் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் தலைவர் மற்றும் மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் முன்னாள் தலைவர் ரவி வெங்கடேசன் வழி நடத்திக் கொண்டு இருக்கிறார்.
வியாபாரம் தொடர்பான டேட்டாக்கள்
இந்தியாவில் இருக்கும் மொத்த சிறு குறு தொழில்முனைவோர்களில் 73 சதவிகிதம் பேராவது, தங்களுக்கு வரும் ஆர்டர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். 50 சதவிகித சிறு குறு தொழில்முனைவோர்களின் சரக்கு கையிருப்பு 15 சதவிகிதமாவது அதிகரித்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்களாம்.
தலைவலி மேல் தலைவலி
இதற்கு மேல், டிமாண்ட் இல்லாத சூழல், சப்ளை செயின் சிக்கல், ஏற்கனவே சரக்கை அனுப்பியவர்களிடம் இருந்து பணத்தை திரும்பப் பெற முடியாமல் தவிப்பது என சிக்கலுக்கு மேல் சிக்கலில், நம் சிறு குறு தொழில்முனைவோர்கள் மூழ்கித் திளைத்துக் கொண்டு இருப்பதாகச் சொல்கிறது இந்த Global Alliance of Mass Entrepreneurship (Game) அமைப்பின் அறிக்கை.
லாபச் சரிவு
மேலே சொன்ன இந்த பிரச்சனைகளால், இந்தியாவில் இருக்கும் சிறு குறு தொழில்முனைவோர்களில் 75 - 250 கோடி ரூபாய்க்குள் டேர்ன் ஓவர் இருக்கும் MSME-களுக்கு 0.8 லட்சம் கோடி ரூபாய் முதல் 1.2 லட்சம் கோடி ரூபாய் வரை லாபம் சரியலாம் எனவும் கணித்து இருக்கிறது Global Alliance of Mass Entrepreneurship (Game) அமைப்பின் அரிக்கை.
யார் எல்லாம் இருந்தார்கள்
இந்த அமைப்பில் டீம் லீஸ் என்கிற மனித வள மேம்பாட்டு கம்பெனியின் தலைவர் மனீஷ் சபர்வால், பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் கம்பெனியின் தலைவர் ஆனந்த் தேஷ்பாண்டே, முன்னாள் அரசு அதிகாரி கே பி கிருஷ்ணன், ஐடிசி நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சீவ் பூரி, பாஸ்ச் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஸ்ரீனிவாசன் எஸ் சி போன்றவர்கள் இந்த கேம் அமைப்பில் இருந்தார்களாம்.
கோரிக்கை Short term
MSME தரப்பினர்களுக்கு அரசு அறிவித்த விஷயங்களை விரைவாகவும், அழுத்தமாகவும் செயல்படுத்த வேண்டும். அதோடு MSME வாங்கி இருக்கும் கடன்களை வங்கிகள் ஆதரித்து, எளிமையாக திருப்பிச் செலுத்தும் விதத்தை உறுதிப்படுத்த வேண்டும். அப்போது தான், MSME தரப்பினர்களுக்கு கொடுத்திருக்கும் கடன் தொகையில் பெரிய அளவிலான தொகைகளை மீண்டும் வசூலிக்க முடியும்.
கோரிக்கைகள் Medium Term
உடனடியாக செய்து MSME தரப்பினர்களை காப்பாற்றுவதைத் தாண்டி, எளிமையாக வியாபாரம் செய்யவும், சட்ட திட்டங்களை பின்பற்றுவதில் இருக்கும் சிரமங்களைக் குறைக்கவும் வழி வகை செய்யச் சொல்லிக் கேட்டு இருக்கிறது கேம் அமைப்பு. இந்தியாவில், ஒரு வியாபாரத்தைத் தொடங்கி நடத்துவதில், மொத்தம் 58,000 சட்ட திட்டங்கள் இருக்கிறதாம். இந்த 58,000 சட்ட திட்டங்களில், 9,000 சட்ட திட்டங்களை மீறினால், அவர்கள் மீது penal action எடுக்கலாமாம்.
தீர்வு
எனவே மாநில அளவில் எளிமையாக வியாபாரம் செய்வதை மதிப்பிட வேண்டும். மதிப்பிடும் போது அதன் நோக்கம் மற்றும் அதற்கான மதிப்பெண் அட்டைகளையும் வெளியிட வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை இந்த மதிப்பீடு நடவடிக்கை நடக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறது கேம் அமைப்பு. இவை எல்லாம் medium term-ல் செய்ய வேண்டியவைகள்.
நீண்ட காலத்துக்கு
இந்தியாவில் நிறைய MSME இன்குபேட்டர்களை தொடங்குவது, MSME-களுக்கு என்றே தனியாக நிலத் தொகுப்புகள், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளோடும், டிஜிட்டல் வசதிகளோடும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஆறிவிக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் கேம் அமைப்பை முன்னெடுத்துச் செல்லும் வெங்கடேசன்.