டெல்லி: சிறு குறு மற்றும் தொழில் முனைவோருக்கான திட்டம் தான் முத்ரா. இது பிரதமர் நரேந்திர மோடி கடந்த2015ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் 3 வகைகளில் குறுந்தொழில் முனைவோர் தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவு படுத்திக் கொள்ளவும் கடன்களை வழங்கி வருகிறது.
இதன் படி இந்த திட்டத்தின் மூலம் சிசு திட்டம் மூலமாக 50,000 ரூபாய் வரையிலும், இதே கிஷோர் திட்டத்தின் மூலம் 50,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையில் வழங்கப்பட்டு வருகிறது. இதே தருண் திட்டத்தின் மூலம் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் பெறலாம்.
வேலைவாய்ப்பு கூடியிருக்கிறது
இந்த நிலையில் இந்த திட்டத்தின் மூலம், கடந்த பிப்ரவரி வரையில், 5.1 மில்லியன் புதிய தொழில்முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இதுவரை 112 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் ஒரு புறம் வேலை வாய்ப்புகள் பறிபோகிறது என்று கூறப்படும் நிலையில், மறுபுறம் இப்படி புதிய தொழில் முனைவோரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய தொழில் முனைவோர் குறைவு தான்
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிக்கையில், இது வரை 425 லட்சம் பேர் இந்த முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். எனினும் இந்த முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வாங்குபவர்கள் ஐந்தில் ஒருவர் தான் அதாவது 20.6 சதவிகிதம் பேர் தான் புதிய தொழில் முனைவோராக உள்ளனர் என்றும், மீதமுள்ளவர்கள் தங்களது தற்போதுள்ள வணிகங்களை விரிவுபடுத்த இதை பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
முத்ராவில் வேலை வாய்ப்பு அதிகரிப்பு
அரசின் கணக்கின் படி, கடன்களைப் பெற்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட வேலைகள் 28 சதவிகிதம் உயர்ந்துள்ளன என்று கூறப்படுகிறது. இதுவே தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அறிக்கையின் படி, முத்ரா லோன் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் 504 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும், இது முன்பு 393 லட்சமாக மட்டுமே இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பெண் தொழில் முனைவோர் அதிகரிப்பு
இந்த நிலையில் கடந்த 2015 - 2018ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் 112 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 55 சதவிகிதம் பேர் சுயதொழில் முனைவோர் என்று கூறப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் 62 சதவிகிதம் பெண்களும் இதில் அடங்கும். அதிலும் இந்த முத்ரா திட்டத்தின் கீழ் பெண்களுக்கென சில பல சிறப்பு சலுகைகளும் உண்டு.