முகேஷ் அம்பானி தான் பல ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக இருக்கிறார். உலக பணக்காரர்கள் பட்டியலில் 13-வது இடத்தில் இருக்கிறார் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை.
2002-ம் ஆண்டு திருபாய் அம்பானி மறைவுக்குப் பின் ரிலையன்ஸ் குழுமத்தின் சொத்துக்களை, அண்ணன் தம்பிகள் பிரித்துக் கொண்டு வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள்.
தம்பி அனில் அம்பானி பணக்காரர்கள் பட்டியலிலேயே காணவில்லை. அண்ணன் முகேஷ் அம்பானியின் பெயரை தவிர்த்து விட்டு பணக்காரர்கள் பட்டியலை தயார் செய்யவே முடியவில்லை.
ஹூரன் பட்டியல்
உலகில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் பணக்காரர்களை ஆராய்ந்து பட்டியல் போடுவது போல, ஹூரன் என்கிற ரூபர்ட் ஹூக்வெர்ஃப் (Rupert Hoogewerf) என்பவர் பணக்காரர்கள் பட்டியலைத் தயாரித்து வெளியிடுகிறார். இவர் பணகாரர்களைப் பற்றி ஆய்வு செய்து வெளியிடும் அறிக்கையைத் தான் ஹூரன் ரிப்போர்ட் என்கிறார்கள்.
டாப் 10-ல்
கடந்த மார்ச் 2019-ல் வெளியான ஹூரன்ஸ் ரிச் லிஸ்ட் பட்டியலில், இந்தியாவில் இருந்து ஒரே ஒரு நபர் தான் இடம் பிடித்து இருந்தார். வேறு யார்..? நம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புகழ் முகேஷ் அம்பானி தான். கடந்த மார்ச் மாதம் ஹூரன் பட்டியல் வெளியான போது, ஹூரன் கணக்குப் படி நம்மவரின் சொத்து மதிப்பு 54 பில்லியன் டாலர்.
அதிகரிப்பு
ஃபோர்ப்ஸ் கணக்குப் படி, கடந்த மார்ச் 2019-ல் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலர். இப்போது (டிசம்பர் 10, 2019) ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் கணக்குப் படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமாராக 60.2 பில்லியன் அமெரிக்க டாலர். ஆக கடந்த 9 மாதங்களில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து இருக்கிறது.
9 மாதத்தில்
வெறும் 9 மாதத்தில் 10 பில்லியன் டாலரா..? எப்படி..? இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிட்டு இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை, புதிய உச்சங்களைத் தொட்டது தான். அதோடு இதுவரை எந்த ஒரு இந்திய நிறுவனமும் தொடாத 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு என்கிற புதிய உச்சத்தைத் தொட்டதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த இலக்கு
அடுத்த 2 - 3 ஆண்டுகளில், முகேஷ் அம்பானி உலகின் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலில் கூட இடம் பிடிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் ஹூரன் என்கிற ரூபர்ட் ஹூக்வெர்ஃப் (Rupert Hoogewerf). ஏன் இப்படிச் சொல்கிறார். அம்பானி மீது அப்படி என்ன நம்பிக்கை..? எனக் கேட்டால் ஜியோ மற்றும் ரீடெயிலைச் சுட்டிக் காட்டுகிறார்.
வியாபாரம்
அம்பானிக்கு அடுத்து வர இருக்கும் பணம் டெலிகாம், ரீடேயில் ஆகிய துறை சார்ந்த வியாபாரங்களில் இருந்து வரும். ஆக இணையம், பிராட்பேண்ட், சாதாரண மளிகை கடைகளில் இணையத்தைப் பயன்படுத்தி இணைத்து சில்லறை வியாபாரம் செய்ய இருப்பது போன்றவைகளை காரணமாகச் சொல்கிறார். எனவே முகேஷ் அம்பானி உலகின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவராக, அடுத்த சில வருடங்களில் வர வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
அந்த டாப்
ஆக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் ஆகிய இரண்டு நிறுவனங்களை வைத்து, முகேஷ் அம்பானி ஆடத் தொடங்கி இருக்கும் ஆட்டம் இப்போது தான் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. அதை முகேஷ் அம்பானி தெளிவாக கண்டு கொண்டார். அம்பானியின் போக்கை ஒரு ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்துவிட்டார். ஆக இனி ரிலையன்ஸ் ஆட்டம் எல்லோரையும் அலற விடும் குத்தாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். உதாரணம் ஜியோ.
நம்பர் 1
அதோ அந்த டாப்புக்கு (உலகின் நம்பர் 1 பணக்காரர்) வந்துக்கிட்டு இருக்கேன்... என சொல்லாமல் சொல்கிறார் முகேஷ் அம்பானி. காரணம் அம்பானி வளைத்து இருப்பது, இனி உலகில் தவிர்க்கவே முடியாத டெலிகாம் மற்றும் சில்லறை வணிகம். அதுவும் உலகின் இரண்டாவது அதிகம் மக்கள் தொகை கொண்ட நாட்டில். முகேஷ் அம்பானி உலகின் நம்பர் 1 பணக்காரன் ஆவாரா..? பார்ப்போம்.
முதல் இடம்
அம்பானி முதலிடத்துக்கு வருவது ஒரு பக்கம் இருக்கட்டும். தற்போது அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பிசாஸ் அண்ணாத்த முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் அவருக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் உலகப் புகழ் பெற்ற, பிரான்ஸ் நாட்டின் லூயிஸ் வுட்டன் (Louis Vuitton) நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறாராம்.