முகேஷ் அம்பானிக்கு சுக்ர தசா புத்தி நடந்து கொண்டு இருக்கிறது போல. மனிதர் தொடர்ந்து பணக்காரர் ஆகிக் கொண்டே இருக்கிறார்.
இன்று கூட, ஒரே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமாராக 21,500 கோடி ரூபாய் அதிகரித்து இருக்கிறது.
இந்த சொத்து மதிப்பு எப்படி அதிகரித்தது? தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி எங்கு இருக்கிறார்? இதற்கு முன்பு யாரை எல்லாம் ஓவர் டேக் செய்து இருக்கிறார் என்பதை எல்லாம் பார்ப்போம்.
இப்படித் தான் சொத்து அதிகரித்தது
கடந்த மார்ச் 2020 பங்குச் சந்தை வீழ்ச்சியின் போது 875 ரூபாயில் இருந்து ரிலையன்ஸின் பங்கு விலை, அடுத்தடுத்த மாதங்களில், தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில வாரங்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டே வருகின்றன. இன்று ரிலையன்ஸ் பங்கு விலை புதிய உச்சமாக 2,010 ரூபாயைத் தொட்டு இருக்கிறது.
49% பங்குகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் 49 சதவிகித பங்குகளை நம் முகேஷ் அம்பானி தான் வைத்திருக்கிறார். எனவே பங்கு விலை அதிகரிக்கும் போது, நம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் அதிகரிக்கத் தானே செய்யும். அதான் ஒரே நாளில் ரிலையன்ஸ் பங்கு விலை அதிகரித்ததால் 2.9 பில்லியன் டாலர் (சுமார் 21,500 கோடி ரூபாய்) அம்பானியின் சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது.
5-வது இடம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கம்பெனியின் பங்கு விலை உயர்வால், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, இன்றைக்கு 74.7 பில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறது. எனவே, தற்போது உலகின் 5-வது பெரிய பணக்காரராக உயர்ந்து இருக்கிறார். அடுத்த டார்கெட் உலகம் முழுக்க வாடிக்கையாளர்களைக் கொண்வைத்திருக்கும் ஃபேஸ்புக் ஓனர் மார்க் சக்கர்பெர்க் தான். ஆனால் அவர் கொஞ்சம் தொலைவில் 89 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4-வது இடத்தில் இருக்கிறார்.
வாரன் பஃபெட் & லாரி பேஜ்
சமீபத்தில் தான் உலகின் முன்னனி முதலீட்டாளரான வாரன் பஃபெட்டை சொத்து மதிப்பில் பின்னுக்குத் தள்ளினார் முகேஷ் அம்பானி. அதே போல கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனர் லாரி பேஜையும் சொத்து மதிப்பில் பின்னுக்குத் தள்ளினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. முகேஷ் அம்பானியைப் போல, பில்லியனர்கள் பட்டியலில், இன்னொருவரும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கிறார்.
போட்டியாளர்
யாரும் அதிகம் எதிர்பார்க்காத வகையில், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற புதிய தலைமுறை நிறுவனங்களை வழி நடத்தும் தலைவர் எலான் மஸ்க், முகேஷ் அம்பானியைப் பின் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே வருகிறார். தற்போது 71.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 8-வது இடத்தில் இருக்கிறார்.
டெலிகாம் மற்றும் ரீடெயில்
ரிலையன்ஸ் நிறுவனத்தை ஒரு எரிசக்தி & கச்சா எண்ணெய் நிறுவனம் என்பதில் இருந்து டெலிகாம் & ரீடெயில் நிறுவனமாக மாற்றிக் கொண்டு இருக்கிறார் அம்பானி. அம்பானியின் அடுத்த வளர்ச்சிக்கும் கை கொடுக்க இருக்கும் துறைகளும் டெலிகாம் மற்றும் ரீடெயிலில் இருந்து தான்.
ரீடெயில் வியாபாரம்
ஏற்கனவே, இந்தியாவின் மிகப் பெரிய ரீடெயில் கம்பெனியாக ரிலையன்ஸ் இருக்கிறது. ஆனால், இன்னும் தன்னை வளர்த்துக் கொள்ள வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறது. சுருக்கமாக இந்தியாவின் ரீடெயில் தாதாவாக தன்னை உருவாக்கிக் கொள்ள வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகிறது.
ஜியோ டெலிகாம்
ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், கடந்த சில மாதங்களில் சுமார் 20 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்த்து இருக்கிறது. கூகுள், ஃபேஸ்புக் போன்றவர்கள் எல்லாம் ரிலையன்ஸ் ஜியோவில் ஒரு பங்குதாரர்களாக நிற்கிறார்கள். விரைவில் க்வால்காம், கூகுள் உடன் இணைந்து ஒரு ஸ்மார்ட்ஃபோனை வேறு களம் தயாரிக்க போகிறது. ஏற்கனவே இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட டெலிகாம் கம்பெனி என டாப் கியரில் பறந்து கொண்டு இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ.
மேலும் அதிகரிக்கலாம்
எனவே, அடுத்த சில ஆண்டுகளில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இன்னும் சில பல பில்லியன்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இது போக ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவை தனியாக பட்டியலிடும் போது மதிப்புகள் இன்னும் கூட அதிகரிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. உலகின் டாப் 3 பணக்காரர்களில் ஒருவராக அம்பானி வருவாரா..? ஜியோவும் ரிலையன்ஸ் ரீடெயிலும் தான் பதில் சொல்ல வேண்டும். விரைவில் உரக்கச் சொல்லும் என எதிர்பார்ப்போம்.