முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல், ஜியோமார்ட் சேவை மூலம் ஒருபக்கம் நேரடியாக வாடிக்கையாளர்களை பெற்று வந்தாலும், மறுபுறம் மளிகைக் கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களுடன் நேரடி ஒப்பந்தம் செய்து அதிகப்படியான தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இப்படி வாடிக்கையாளர்களையும், விற்பனையாளர்களையும் ஓரே நேரத்தில் கைப்பற்றுவது தான் B2B2C முறை.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் வருகையால் ரீடைல் துறையில் ஏற்கனவே டிஸ்ட்ரிபியூட்டர் மத்தியில் கடுமையான பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், தொடர்ந்து விற்பனையாளர்கள் உடனான கூட்டணியை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ரீடைல் துறையைத் தொடர்ந்து அடுத்துப் பார்மா துறைக்குள் நுழைய திட்டமிட்டு உள்ளார் முகேஷ் அம்பானி.
ஆன்லைன் பார்மா துறை
2020 ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் பார்மா துறைக்குள் நுழைய வேண்டும் என்பதற்காகச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நெட்மெட்ஸ் நிறுவனத்தைச் சுமார் 620 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. நெட்மெட்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியதில் இருந்து ரிலையன்ஸ் ரீடைல், இந்நிறுவனத்தின் மொத்த விலை வர்த்தகத்தை ஆன்லைன் வர்த்தகத்துடன் இணைத்து மிகப்பெரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டு வந்தது.
ஜியோமார்ட் தளம்
குறிப்பாக ஜியோமார்ட் தளத்தில் நெட்மெட்ஸ் சேவைகளை அறிமுகம் செய்தது மூலம் நேரடி வாடிக்கையாளர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்ததுள்ளது. இதுவரையில் ஆன்லைன் பார்மா துறையில் B2C பிரிவில் மட்டுமே இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் தற்போது B2B பரிவிலும் இறங்கத் திட்டமிட்டு வருகிறது.
ரீடைல் வாடிக்கையாளர்
இத்திட்டத்தின் முதல் படியாக ரீடைல் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான மருந்துகளை நேரடியாக ஜியோமார்ட் கிடங்குகள் அல்லது நெட்மெட்ஸ் கடைகளில் இருந்து டெலிவரி செய்யாமல் அருகில் இருக்கும் மருந்து கடைகளின் வாயிலாக ஆர்டர்-ஐ நிறைவு செய்ய முடிவு செய்துள்ளது. இது ஜியோ தளத்தின் ஹைபர்லோக்கல் டெலிவரி திட்டத்தைப் பெரிய அளவில் மேம்படுத்தும்.
ஹைபர்லோக்கல் டெலிவரி திட்டம்
இந்தியா முழுவதும் இருக்கும் மருந்து கடைகளுக்கு ஏற்கனவே நெட்மெட்ஸ் வாயிலாக மருந்து பொருட்களை ஆன்லைன் ஆர்டர் செய்யும் சேவை மூலம் பூர்த்திச் செய்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் தற்போது இப்பிரிவு வர்த்தகத்தை மேம்படுத்த ஹைபர்லோக்கல் டெலிவரி திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
உதான் நிறுவனம்
சமீபத்தில் இத்துறையில் ஜியோமார்ட் தளத்திற்குப் போட்டியாகப் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் உதான் நிறுவனம் பார்மா துறையில் B2B வர்த்தகத்திற்குள் நுழைந்தது. உதான் நிறுவனத்தின் போட்டி மற்றும் வர்த்தகத்தைச் சமாளிக்க ஜியோமார்ட் ஹைபர்லோக்கல் டெலிவரி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
B2B2C வர்த்தக முறை
ஜியோ தளத்தில் பார்ட்னர் ஆகச் சேர்ந்துள்ள அனைத்து வர்த்தகங்களும், இத்தளத்தின் வாடிக்கையாளர்களின் ஆர்டர் தீர்க்கும் fulfilment centre ஆக விளங்குகிறது. மேலும் B2B2C மூலம் ஜியோ பார்டனர்கள் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் அல்லாமல் விற்பனை செய்யவும் வழிவகைச் செய்கிறது.