இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் அவர் ஆரம்பிக்கும் ஒவ்வொரு தொழிலும் லாபத்துடன் இயங்கி வருகிறது என்பதும் தெரிந்ததே.
வாழ்க்கைக்கு தேவையான மளிகை பொருட்கள் முதல் 5ஜி நெட்வொர்க் வரை அவர் தொடாத துறையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சலூன் தொழிலில் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை சலூன் நிறுவனம்
சென்னையை தளமாகக் கொண்ட நேச்சுரல்ஸ் சலோன் & ஸ்பா என்ற நிறுவனத்தை வாங்குவதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நேச்சுரல்ஸ் சலோன் & ஸ்பா நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வாங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நேச்சுரல்ஸ் சலோன் & ஸ்பா
ஆனால் இதுகுறித்து நேச்சுரல்ஸ் சலோன் & ஸ்பா தலைமை நிர்வாகி சி.கே.குமாரவேல் அவர்கள் பேசியபோது, இது குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளன என்பதும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
3000 சலூன் கடைகள்
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நேச்சுரல்ஸ் சலோன் & ஸ்பா நிறுவனம் 2000 ஆண்டுகளின் முற்பகுதியில் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட சலூன் கடைகளை நடத்தி வரும் இந்நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 3000 சலூன்களை நடத்த திட்டமிட்டு இருப்பதாக அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த மதிப்பு
நேச்சுரல்ஸ் சலோன் & ஸ்பா நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்குவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டால்ம் எவ்வளவு விலைக்கு வாங்குகிறது என்ற ஒப்பந்தம் மதிப்பு எதுவும் இன்னும் வெளிவரவில்லை.
ஊரடங்கின்போது பாதிப்பு
2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது மிகவும் பாதிக்கப்பட்ட தொழில்களில் ஒன்று சலூன் என்பதும் கடந்த இரண்டு வருடங்களாக நேச்சுரல்ஸ் சலோன் & ஸ்பா நிறுவனம் மிகப் பெரிய பாதிப்பு அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு பாதிப்பு முற்றிலும் நீங்கி விட்ட நிலையில் மீண்டும் நல்ல லாபத்துடன் சலூன்கள் இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.