இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் சம்பளம் ஜீரோ என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை அது தான். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இவருக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை.
என்ன காரணம்? ஏன் சம்பளம் வாங்கவில்லை? இவருக்கு முன்னதாக எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது? மற்ற முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
சம்பளம் வேண்டாம்
கடந்த 2020 - 21ம் ஆண்டில் கொரோனா காரணமாக வணிகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வளர்ச்சியினை மீட்டெடுக்கும் விதமாக தனக்கு சம்பளம் வேண்டாம் என கூறியிருந்தார். இதனை 2020 - 21ம் வருடாந்திர அறிக்கையிலும் காண முடிந்தது. இந்த நிலையில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக 2021 - 22ம் ஆண்டிலும் அதனையே தொடர்ந்துள்ளார்.
2 ஆண்டுகளாகவே சம்பளம்
முகேஷ் அம்பானி தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனராக இருந்து வந்தாலும், நிறுவனத்தில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாகவே எந்த விதமான அலவன்ஸ், பங்குகளோ அல்லது வேறு எந்த சலுகையும் பெறவில்லை என கூறப்படுகிறது.
11 ஆண்டுகளாகவே ஒரே சம்பளம்
முன்னதாக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரின் சம்பளம் 2008 - 09 முதல் 15 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. கடந்த 11 ஆண்டுகளாகவே இந்த சம்பள விகிதம் மாறவில்லை என்றும், 2019 - 20 வரையில் ஒரே சம்பளமாகத் தான் இருந்து வருகின்றது.
மற்றவர்களுக்கு என்ன சம்பளம்?
இவரது சம்பளம் 15 கோடி என்றாலும், மற்ற சலுகைகள் என அனைத்தும் சேர்த்து 24 கோடி ரூபாய் வரையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகேஷ் அம்பானியின் உறவினர்களான நிகில் மற்றும் ஹிடல் மேஸ்வானியின் சம்பளமும் மாறாமல் 24 கோடி ரூபாயாக உள்ளது.ஆனால் இந்த முறை கமிஷனாக 17.28 கோடி ரூபாய் தொகை சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சம்பளம் குறைப்பு
அதேபோல நிர்வாக இயக்குனர்கள் பி எம் எஸ் பிரசாத் மற்றும் பவன் குமார் கபில் ஆகியோரின் சம்பளம் சற்று குறைந்துள்ளது. பிரசாத்தின் சம்பளம் 2021 - 22ல் 11.89 கோடி ரூபாயாக இருந்தது. இதே 2020 - 21ல் 11.99 கோடி ரூபாயாக இருந்தது. இதே பவன் குமார் கபிலுக்கு 4.24 கோடி ரூபாயில் இருந்து, 4.22 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.