இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு சிக்கலான ஆண்டாகவே இருந்தது. குறிப்பாக இந்தியப் பொருளாதாரத்துக்கு இந்த 2019 அத்தனை நல்ல ஆண்டாக அமையவில்லை.
தொடர்ந்து இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில் ஒன்றான ஜிடிபி சரிவு, ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் தேக்கம், மக்கள் கையில் பணப் புழக்கம் குறைந்ததால் நுகர்வு சரிந்தது, முதலீடுகள் சரிந்தது, ஆட்டோமொபைல் விற்பனை சரிவு என எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி விழுந்து கொண்டே இருந்தது.
மாற்றம் இல்லை
இந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், வேலை இல்லா திண்டாட்டம் வேறு விண்ணைத் தொடும் விதமாக, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவிகிதத்தைத் தொட்டது எல்லாம் தனிக் கதை. இப்போதும் பெரிதாக பொருளாதார சூழல்கள் மாறியதாகத் தெரியவில்லை. ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியோ, தற்போது இருக்கும் இந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது தான் எனச் சொல்லி இருக்கிறார்.
முகேஷ் அம்பானி
இந்தியாவின் பொருளாதார பிரச்னைகள், உலக பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையால் வந்தது. அடுத்த தசாப்தத்தில் இந்தியா சிறப்பாக செயல்பட நிறைய வாய்ப்பு இருப்பதாகச் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
கடந்த 11 வர்த்தக நாளில் சென்செக்ஸ் சுமாராக 3000 புள்ளிகள் சரிந்து இருக்கின்றன. இந்த சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட, பல நிறுவன பங்குகளின் விலை சரமாரியாக சரிந்து இருக்கிறது.
இழப்பு
இந்த பங்குச் சந்தை சரிவால் மட்டும், நம் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சுமாராக 35,000 கோடி ரூபாய் (5 பில்லியன் அமெரிக்க டாலர்) சொத்து மதிப்பை இழந்து இருக்கிறாராம். நேற்று டிசம்பர் 2019 காலாண்டுக்கான ஜிடிபி வெளியானது. அதில் டிசம்பர் 2019 காலாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி 4.7 சதவிகிதம் வரை வளரலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில்
இது சுமாராக கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த டிசம்பர் 2019 காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி சரிந்து இருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த நாளில் தான், நம் முகேஷ் அம்பானி, இந்தியப் பொருளாதாரத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைச் சொல்லி இருக்கிறார். அதோடு "அரசின் சீர் திருத்தங்கள் விரைவில் பலன் கொடுக்கத் தொடங்கும்" எனவும் சொல்லி இருக்கிறார் அம்பானி.


Click it and Unblock the Notifications