மும்பை : இந்தியாவில் கடனை வாங்கிவிட்டு அவற்றை கட்டாமல் வெளி நாடுகளுக்கு தப்பி செல்லும் ஊழல் பேர்வழிகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக தற்போது மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
அப்படி என்ன தீர்ப்பு என்று கேட்கிறீர்களா? பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழல் புகழ் நிரவ் மோடியை பொருளாதார குற்றவாளியாக அறிவித்துள்ளது தான்.
பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியும் அவரது நெருங்கிய உறவினருமான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,000 கோடி ரூபாய் கடனை வாங்கி விட்டு, அதுவும் மோசடி செய்து கடன் வாங்கி விட்டு, இந்தியாவை விட்டே வெளியேறினர்.
அமலாக்கப்பிரிவு வழக்கு
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு இரு நோட்டீஸ்களை அந்த சமயத்தில் நீதிமன்றத்தில் சமர்பித்தது. நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஷியை பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறித்தி வந்தது. ஏற்கனவே இந்த சட்டத்தின் கீழ் விஜய் மல்லையா பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
பொருளாதார குற்றவாளி
இந்த நிலையில் மும்பை சிறப்பு நீதிமன்றம் நிரவ் மோடியை பொருளாதார குற்றவாளியாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நிரவ் மோடியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய இது வழிவகை செய்யும் என்றும் கூறப்படுகிறது. இந்த சிறப்பு சட்டத்தின் மூலம் முதல் பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையா அறிவிக்கப்பட்டார். எஸ்.பி.ஐ உள்ளிட்ட பல வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
லண்டனில் காவல் நீட்டிப்பு
இந்த நிலையில் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, வைர வியாபாரி நிரவ் மோடியை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் லண்டனில் இன்று அவருக்கு, ஜனவரி 2 வரை காவலை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வைர வியாபாரி
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் முகுல் சோக்சி ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல், வெளிநாடு தப்பிச் சென்றனர். இந்த நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் பதுங்கி இருந்த நிரவ் மோடியை, கடந்த மார்ச் மாதம், லண்டன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு
நிரவ் மோடியை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டு வரும் இந்த நிலையில், இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு மே 11ல் துவங்கி ஐந்து நாட்கள் நடைபெற இருப்பதாக லண்டன் நீதிபதிகள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நிரவ் மோடியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், அவரது நீதிமன்ற காவலை, ஜனவரி 2 வரை நீட்டித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.