இந்தியா என்கிற மிகப் பெரிய வியாபார சந்தையில் எப்போதும் அமேசான் நிறுவனத்துக்கும், அதன் ஓனர் ஜெஃப் பிசாஸுக்கும் ஒரு ஆழமான கண் உண்டு.
போகிற போக்கில் இது இந்தியாவின் நூற்றாண்டு எனச் சொல்லும் அளவுக்கு போகிறார் என்றால், நம் ஜெஃப் பிசாஸுக்கு இந்தியா மீது இருக்கும் வியாபார பற்றைப் புரிந்து கொள்ள முடியும்.
தற்போது அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசாஸ், இந்தியாவுக்கு, ஒரு நிகழ்ச்சிக்காக வந்து இருக்கிறார். அதில் தான் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்து இருக்கிறது.
கூட்டம்
நேற்று ஜனவரி 15, 2020, புதன் கிழமை, காலை, அமேசான் சம்பவ் (Amazon SMBhav) என்கிற பெயரில் டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில், சிறு குறு தொழில்முனைவோர்களுக்கான கூட்டம் தொடங்கியது. இன்றும் நடத்திக் கொண்டு இருக்கிறார் அமேசானின் நிறுவனர் ஜெஃப் பிசாஸ்.
பங்கேற்கிறார்கள்
இந்த 2 நாள் கூட்டத்தில், சுமார் 100-க்கும் மேற்பட்ட பெரிய வியாபாரிகள், துறை சார் வல்லுநர்கள், 3500-க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில்முனைவோர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் கம்பெனிகள், 70-க்கும் மேற்பட்ட பிசினஸ் & டெக்னாலஜி கூட்டாளிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் அடைந்து வருகிறார்களாம்.
தொடக்க விழா
நேற்று தான் இந்தக் கூட்டம் தொடங்கப்பட்டது. இந்த தொடக்கக் கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக, இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கெளரவ தலைவராக இருக்கும் நாராயண மூர்த்தியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சி குறித்த நேரத்தில் தொடங்கவில்லை. நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நாராயண மூர்த்தியை பேச அழைத்த போது தன் கடுப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாராயண மூர்த்தி பேச்சு
இனி அவர் பேசியது அவர் மொழியில் "நாம் சுமாராக ஒன்றரை மணி நேரம் தாமதமாக தொடங்கி இருக்கிறோம். நான் 11.45-க்கு பேசி முடித்து இருக்க வேண்டும். ஆனால் 11.53-க்குத் தான் நான் பேசத் தொடங்குகிறேன். என் உரையை கூடுமான வரை சுருக்கமாக பேசி முடிக்கிறேன். நான் தாமதத்துக்கு பழக்கப்பட்டவன் அல்ல" எனப் பேசி இருக்கிறார். சொன்னது போல சுருக்கமாகப் பேசி முடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமேசான் உறவு
இந்திய அரசு இ-காமர்ஸ் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, அமேசான் நிறுவனம் வைத்திருக்கும் க்ளவுட் டெயில் என்கிற நிறுவனத்தின் 25 சதவிகித பங்குகளை, நாராயண மூர்த்தியின் ப்ரிஆன் பிசினஸ் சர்வீசஸ் (Prione Business Services)நிறுவனத்துக்கு விற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அமேசான் மற்றும் நாராயண மூர்த்திக்கு இடையில் வியாபார உறவுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சண்டையா
இவங்களுக்குள்ள எதுனா சண்டையா..? ஏன் இப்படி திடீருன்னு கார சாரமா பேசுறாரு நம்ம நாராயண மூர்த்தி..? என வெகு ஜனங்களே கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஒருவேளை சண்டையாக இருந்தால் போகப் போக தானே வெளி வரும். சண்டை இல்லாமல் சமாதானமாக வியாபாரம் செய்தால் சரி.