நாசா நிறுவனத்தில் பணி செய்ய வேண்டும் என்பது இந்தியர்கள் மட்டுமன்றி உலகின் பல நாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வாளர்களுக்கு உரிய கனவாகும்.
அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் அதிரா தற்போது நாசாவில் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இவர் இந்தியாவின் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர்களை அடுத்து விண்வெளிக்குச் செல்லும் மூன்றாவது இந்திய பெண்மணி என்ற பெருமையை விரைவில் பெற உள்ளார்.
அதிரா ப்ரீத்தா ராணி
கேரளாவை சேர்ந்த அதிரா ப்ரீத்தா ராணி பள்ளியில் படிக்கும்போதே விண்வெளி வீராங்கனை ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள வானியல் சம்பந்தமான வகுப்புகளில் அவர் கலந்துகொண்டார். விண்வெளி குறித்த அவருடைய அறிவு நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே இருந்தது.
விமானி
இந்த நிலையில் படிக்கும்போதே வேலை செய்து தனது குடும்பத்தினருக்கு பாரம் இல்லாமல் இருந்த அதிரா ப்ரீத்தா ராணி, இளம் வயதிலேயே கனடா நாட்டின் ஒட்டாவாவில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார். விமானி ஆக வேண்டும் என்றும் இன்னொரு கனவுடன் இருந்த அதிராவுக்கு விமானி ஆக வேண்டும் என்றால் விமான படையில் சேர வேண்டிய அவசியமில்லை என்று கேள்விப்பட்டதும் தனது விண்வெளி படிப்பிற்காக பணத்தை சேமித்து வைத்தார்.
திருமணம்
விண்வெளி சம்பந்தமான படிப்பை நல்ல மதிப்பெண்களுடன் முடித்த சமயத்தில் தான் அதிராவுக்கு திருமணம் நடந்தது. அவருடைய கணவரும் அதிராவின் விண்வெளி கனவு நனவாக ஆதரவாக இருந்தார். இதனால் அதிராவின் விண்வெளி ஆய்வுகள் தொடர்பான கனவு வளர்ந்துகொண்டே இருந்தது.
ஆய்வு
இந்த நிலையில் தனது கணவருடன் இணைந்து எக்ஸோ ஜியோ ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை தொடங்கிய அதிரா, பல்வேறு விண்வெளி வீரர்களின் பயிற்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
நாசா
அப்போது தான் அவருக்கு சர்வதேச விண்வெளி அறிவியல் நிறுவனம் நடத்திய விண்வெளி வீரர் பயிற்சி திட்டம் குறித்து தெரிய வந்தது. இந்த பயிற்சி திட்டத்தை நாசா நடத்திய நிலையில் அந்த பயிற்சித் திட்டத்தில் இணைந்து அவர் பல்வேறு நிலைகளை கடந்து தற்போது அவர் நாசாவில் பணிபுரியும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
3வது இந்திய பெண்மணி
சந்திரனில் உள்ள விண்வெளி வீரர்களை பாதுகாக்க நாசா பரிசோதனை செய்து வரும் நிலையில் அதில் ஒரு நபராக தற்போது அதிரா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தகுந்த பயிற்சியை முடித்தவுடன் அதிரா விண்வெளிக்கு செல்ல உள்ளார் என்பதும் இந்தியாவின் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்கு பிறகு விண்வெளிக்கு செல்லும் மூன்றாவது இந்திய பெண்மணி என்ற பெருமையை பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.