மத்திய அரசு திங்கட்கிழமை வெளியிட்ட தேசிய பணமாக்கல் திட்டம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்திட்டம் மூலம் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்கள் அதாவது சாலை, மின்சார உற்பத்தி தளம், விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற பலவற்றைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையை நிதி திரட்ட உள்ளதாக அறிவித்தது.
ஆனால் இத்திட்டம் மூலம் விற்பனை செய்யப்படும் சொத்துக்கள் அனைத்தும் நீண்ட கால அடிப்படையில் குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்படும் என்றும், இந்தச் சொத்துக்களின் உரிமை அரசிடம் மட்டுமே இருக்கும் என மத்திய நிதியமைச்சர் இத்திட்ட வெளியீட்டு நிகழ்ச்சியின் போது அறிவித்தார்.
இந்த 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டல் மூலம் மோடி அரசை இதுநாள் வரையில் பயமுறுத்தி வந்த நிதிப் பற்றாக்குறை பிரச்சனையை எளிதாகத் தீர்க்க முடியும்.
நிதிப் பற்றாக்குறை பிரச்சனை
இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக நாட்டின் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தை மந்தமாக இருந்ததால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை அளவு கடந்த நிதியாண்டில் ஜிடிபி அளவில் 9.3 சதவீதமாக இருந்தது. தற்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ள தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ஜிடிபி அளவில் 6.8 சதவீதமாகக் குறைக்க முடியும்.
கொரோனா 2வது அலை
கொரோனா 2வது அலை மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிப் பற்றாக்குறை அளவு மோசமான நிலையை அடையும் எனப் பல பொருளாதார வல்லுனர்கள் கணித்திருந்த நிலையில், தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் இப்பிரச்சனையைச் சரி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேக் இன் இந்தியா திட்டம்
மோடி தலைமையிலான ஆட்சியில் குறிப்பாகக் கொரோனாவுக்கு முன்பாகவே நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தை தொடர்ந்து சரிந்து வந்தது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையை மாற்றப் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது, குறிப்பாக மத்திய அரசால் அதிகமாக விளம்பரம் செய்யப்பட்ட மேக் இன் இந்தியா திட்டம் பெரிய அளவில் தோல்வி அடைந்தது.
கொரோனா தொற்று
இதற்கிடையில் தான் கொரோனா தொற்று நாட்டை மொத்தமாகத் திருப்பிப் போட்டது. முதல் கொரோனா ஆலையின் போது நாட்டின் பொருளாதாரம் -24 சதவீதம் வரையில் சரிந்து பல கோடி மக்கள் ஓரே நேரத்தில் வேலைவாய்ப்புகளை இழக்க வைத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
லாக்டவுன் அறிவிப்பு
இந்தப் பெரும் சரிவுக்கு நாடு முழுவதும் எவ்விதமான முன் ஏற்பாடும் செய்யாமல் லாக்டவுன் அறிவித்தது தான். முதல் அலையில் முழுமையாக மீண்டு வருவதற்கு முன்பாக 2வது அலை வந்த காரணத்தால் மத்திய அரசு அறிவித்த பல வளர்ச்சி திட்டங்கள் பலன் அளிக்காமல் போனது.
ஊக்கத் திட்டம் மூலம் MSME-க்கு நன்மை
2வது அலை பாதிப்பைக் குறைக்கவும் மத்திய நிதியமைச்சகம் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்க திட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் பல கோடி MSME நிறுவனங்கள் பலன் அடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவுகளும் மதிப்பும் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா - சீனா பிரச்சனை
மேலும் கடந்த 2 வருடத்தில் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் பிரச்சனையின் போது பல முன்னணி உற்பத்தி நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறியது. அப்படி வெளியேறிய அதிகப்படியான நிறுவனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் கொடுத்து வரவேற்றது.
தொழிலாளர் எண்ணிக்கை அதிகம்
இந்தியாவில் சீனாவைப் போலவே அதிகப்படியான தொழிலாளர் கூட்டம் இருக்கும் இதேவேளையில், தொழில்நுட்ப திறன் கொண்ட வல்லுனர்களும் அதிகளவில் இருக்கும் காரணத்தால் வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் தொழில் துவங்கவும், உற்பத்தி தளத்தை அமைக்கவும் ஆர்வம் காட்டி வருகிறது.
முக்கியப் பொருட்கள் உற்பத்தி
குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கணினி, சோலார் மற்றும் இதர கன்ஸ்யூமர் எலக்ட்ரானிஸ் பொருட்கள் உற்பத்தி நிறுவனம் மிகவும் ஆர்வமாக இந்தியாவிற்கு வருகிறது. இதன் எதிரொலியாகக் குஷ்மேன் அண்ட் வேக்பீல்டு வெளியிட்ட 2021ஆம் ஆண்டுச் சர்வதேச உற்பத்தி ஆபத்துக் குறியீட்டில் உலகளவில் உற்பத்தி தளம் அமைக்க அதிகம் விரும்பும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2வது இடத்தைப் பிடித்துள்ளது என்று அறிவித்துள்ளது.
மாநில அரசுகள்
இதுமட்டும் அல்லாமல் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தனிப்பட்ட முறையில் பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்குத் தொழில் துவங்கவும், உற்பத்தி செய்யவும் அழைப்பு விடுத்து வருகிறது.
உள்கட்டுமான மேம்பாடுகள் அவசியம்
இந்தச் சூழ்நிலையில் நாடு முழுவதும் தொழிற்சாலைகள் வரும் நிலையில் போக்குவரத்து முதல் ஏற்றுமதி, மக்கள் நலன், வீட்டு வசதிகள், நகரப்புற விரிவாக்கம் போன்ற பல உள்கட்டுமான மேம்பாடுகள் அவசியம். இல்லையெனில் அடுத்த சில வருடத்தில் டிரெட்லாக் ஆகிவிடும்.
அதிகளவிலான வேலைவாய்ப்புகள்
நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமாகவும் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும், இதன் மூலம் நன்மை அடையும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களும் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.
நிதி திரட்ட முடியாது
ஆனால் கொரோனா பாதிப்பு மூலம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தில் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குப் போதுமான நிதி திரட்டுவது என்பது முடியாத காரணம். இதன் காரணமாக இச்சிக்கலைச் சமாளிக்க மத்திய அரசு கையில் எடுத்த திட்டம் தான் இந்தத் தேசிய பணமாக்கல் திட்டம்.
தேசிய பணமாக்கல் திட்டம் - NMP
இந்தத் தேசிய பணமாக்கல் திட்டம் சமீபத்தில் உருவானது இல்லை, இதற்காக மத்திய அரசு ஏற்கனவே பல அமைப்புகளை உருவாக்கி பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கி பெரிய அளவில் நிதி திரட்டி, அதன் பின்பு கடந்த பட்ஜெட் அறிக்கையில் இந்தத் தேசிய பணமாக்கல் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுத் தற்போது மத்திய நிதியமைச்சகம் மற்றும் நித்தி ஆயோக் அமைப்பு இணைந்து அறிவித்துள்ளது.
6 லட்சம் கோடி நிதி திரட்டல்
இந்தத் திட்டம் மூலம் மத்திய அரசு திட்டமிட்டபடி 6 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை திரட்டிவிட்டால் கட்டாயம் ஜாக்பாட் தான், இந்தத் தொகையை முழுமையாக மத்திய அரசு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாடுகள் திட்டங்களுக்குத் தான் முதலீடு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் வர்த்தகத்தையும் பொருளாதாரத்தையும் சிறப்பான முறையில் மேம்படுத்த முடியும்.
மோடி அரசுக்கு ஜாக்பாட்
ஒரு பக்கம் அரசு சொத்துக்களைப் பணமாக்கும் திட்டம் மக்கள் மத்தியிலும், அரசு தலைவர்கள் மத்தியிலும் விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், நீண்ட காலமாக நாட்டின் நிதிப் பற்றாக்குறை பிரச்சனையைத் தீர்க்க வழி தெரியாமல் இருந்த மோடி அரசுக்கு இது இரட்டை லாபமாக உள்ளது.
முக்கியமான பிரச்சனை
இந்த 6 லட்சம் கோடி ரூபாய் என்பது அரசு நிர்ணயம் செய்யும் விலை அளவீடுகள், பொதுவாக அரசு சொத்துக்களை வாங்கத் தனியார் நிறுவனங்கள் பெரிதும் விருப்பம் காட்டுவது இல்லை, அப்படி ஆர்வமாக வந்தாலும் மிகவும் குறைவான விலைக்குத் தான் வாங்க விரும்புகின்றனர்.
இதற்கு உதாரணம் ஏர் இந்தியா.. பல முறை ஏலம் விடப்பட்டுத் தோல்வி அடைந்து தற்போது பல மாற்றங்கள் செய்து விற்பனை செய்யும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லும் 6 லட்சம் கோடி ரூபாய் சாத்தியமா..?!