இந்தியாவில் தற்போது பணப் பரிமாற்றம் செய்யப் பல வழிகள் வந்துவிட்டாலும் பெரிய தொகை செலுத்துவதில் பிராதானமாக இருப்பது NEFT பணப் பரிமாற்றம் தான். இப்படியிருக்கும் போதும் NEFT பணப் பரிமாற்றத்தில் மக்கள் நீண்ட நாட்களாகச் சந்தித்து வரும் ஒரு முக்கியமான பிரச்சனை பணப் பரிமாற்றம் செய்யப்படும் நேர காலம் தான்.
ஆம் NEFT பணப் பரிமாற்றத்தில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரையில் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படும். இந்த நேரத்தை ரிசர்வ் வங்கி 24 மணிநேரமும் வருடம் முழுவதும் செய்துகொள்ளும் வகையில் மாற்றியுள்ளது. இது 16ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட்ட நிலையில்.
சாதனை
24 மணிநேர பணப் பரிமாற்ற வசதிகள் அறிமுகம் செய்யப்பட்ட அதாவது 16ஆம் தேதி இரவு 12 மணி முதல் காலை 8 மணி வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 11.40 லட்ச பணப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. முதல் நாளிலேயே இப்படியொரு எண்ணிக்கையை யாரும் எதிர்பார்க்காத நிலையில் தற்போது இத்திட்டம் மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
24 மணிநேரம்
2019 ஜூன் மாதம் முதல், RTGS எனப்படும் ரியல் டைம் செட்டில்மெண்ட் சிஸ்டம் (Real Time Gross Settlement System) மற்றும் நெஃப்ட் முறையில் பணப்பரிவர்த்தனை செய்யக் கட்டணம் கிடையாது என ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் தற்போது அறிவித்துள்ள 24 மணி நேர பணப் பரிமாற்ற சேவை மக்களுக்குப் பல வகையில் உதவும்.
மேலும் இந்த 11.40 லட்ச பணப் பரிமாற்ற எண்ணிக்கையைப் பார்க்கும்போது மக்கள் மத்தியில் இச்சேவைக்கான வரவேற்பைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
எலைட் கிளப்
ரிசர்வ் வங்கி அமலாக்கம் செய்துள்ள 24 மணிநேர பணப் பரிமாற்றத்தின் மூலம் உலகில் சில நாடுகள் மட்டுமே இத்தகைய சேவையை அளிக்கும் பட்சத்தில் இந்தியா தற்போது எலைட் கிளப்-இல் இணைந்துள்ளது. இது வங்கி பணப் பரிமாற்ற துறையில் மிகப்பெரிய புரட்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது இணைய வாயிலான பணப் பரிமாற்ற சேவையைப் பெரிய அளவில் மக்களிடம் சென்று கொண்டு இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு மகவும் வரவேற்கத்தக்கது.
யூபிஐ
இந்தியாவில் யூபிஐ வாயிலான பணப் பரிமாற்றத்தில் ஏற்கனவே கூகிள், போன்பே, பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் இருக்கும் நிலையி தற்போது அமேசான் பே நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது. கூகிள் பே போலவே அமேசான் நிறுவனமும் அதிகளவிலான சலுகைகளை அறிவித்து வருகிறது.
உண்மையிலேயே இந்தியாவின் இணையப் பணப் பரிமாற்றத்தின் எண்ணிக்கை அடுத்தச் சில மாதங்களைப் புதிய சாதனையைப் படைத்தாலும் வியப்புகொள்ளத் தேவையில்லை.