இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் எஸ்பிஐ வங்கியின் இண்டர்நெட் பேங்கிங், மொபைல் ஆப் ஆகியவை மே 23ஆம் தேதி இரவு முதல் மதியம் 2 மணிவரையில் இயங்காது என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி வங்கிகள் தொடர் டிஜிட்டல் வங்கி சேவை அதிகளவிலான கோளாறுகளைச் சந்தித்தது. குறிப்பாக ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ ஆகியவை பல மணிநேரம் வங்கி சேவைகள் முடங்கும் அளவிற்கு மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டது.
இந்தச் சூழ்நிலையில் எஸ்பிஐ கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து தொழில்நுட்ப மேம்பாடுகளைச் செய்ய அவ்வப்போது டிஜிட்டல் வங்கி சேவைகளை முடக்கி வருகிறது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
எஸ்பிஐ வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரிசர்வ் வங்கி தனது NEFT பணப் பரிமாற்ற சேவைகளில் சில முக்கியமான தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்ய உள்ள காரணத்தால் 22ஆம் தேதி வர்த்தக முடிவிற்கு பின் இந்தத் தொழில்நுட்ப மேம்பாடுகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இண்டர்நெட் வங்கி சேவை
இதன் வாயிலாக எஸ்பிஐ வங்கியின் இண்டர்நெட் வங்கி சேவை, யூனோ செயலி, யூனோ டைல் ஆகியவற்றில் NEFT வங்கி பரிமாற்ற சேவைகள் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 00.01 முதல் 14.00 வரையில் இயங்காது எனத் தெரிவித்துள்ளது.
ஆனால் யூபிஐ, RTGS போன்ற இதர பணப் பரிமாற்ற சேவைகள் எவ்விதமான தடையுமின்றி இயங்கும் எனத் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக் காலம்
கொரோனா தொற்றுக் காலத்தில் இணைய வங்கி சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் மக்களுக்கு இண்டர்நெட் வங்கி சேவையானது மிகவும் முக்கியமானதாகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.
அனைத்து வங்கிகளிலும் பிரச்சனை
மேலும் NEFT தளத்தில் தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யும் காரணத்தால் எஸ்பிஐ வங்கியில் மட்டும் அல்லமல்ல பிற அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளிலும் இந்தச் சேவை இயங்காது.
IMPS மற்றும் RTGS சேவை
இதனால் மக்கள் IMPS அல்லது RTGS சேவையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளனர். IMPS சேவைக்கு 5 ரூபாய் முதல் 6 ரூபாய் வரையிலான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒரே மாதத்தில் 2வது முறை
எஸ்பிஐ வங்கியில் டிஜிட்டல் சேவை தளத்தில் மே 7ஆம் தேதி 22.15 முதல் மே 8 1.45 மணி வரையில் மெயின்டெனன்ஸ் பணிகள் மேற்கொண்ட காரணத்தால் இக்காலத்தில் யூனோ, யூனோ லைட், இண்டர்நெட் வங்கியியல், யூபிஐ சேவை ஆகியவை இயங்கவில்லை.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள்
ஒரே மாதத்தில் 2வது முறையாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இணைய வங்கி சேவைகளை முழுமையாகப் பயன்படுத்துவதில் பிரச்சனையை எதிர்கொள்ளும் காரணத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எஸ்பிஐ வங்கியில் கடந்த சில வருடங்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தால் தற்போது தொழில்நுட்ப தளத்தை மேம்படுத்தி வருகிறது.