நேபாளத்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், வாய் வாய் நூடுல்ஸ் பிராண்ட் நிறுவனத்தின் உரிமையாளருமான பினோத் சவுத்ரி இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக இந்தியாவில் புதிதாக நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளார்.
வாய் வாய் நூடுல்ஸ் பிராண்ட் இந்தியாவில் நிறுவனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாட்டில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியும்.
வாய் வாய் நூடுல்ஸ்
வாய் வாய் நூடுல்ஸ் பிராண்டின் உரிமையாளரான சிஜி கார்ப் குளோபல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான சிஜி புட்ஸ் நிறுவனம் தனது பேக்கேஜ் உணவு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், இந்தியாவில் தனது தயாரிப்புகளைக் கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளதாகச் சிஜி கார்ப் குளோபல் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் வருண் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
சிஜி கார்ப் குளோபல்
இந்தியாவில் தனது தயாரிப்புகளை நாடு முழுவதும் விரைவாகவும், எளிதாகவும் கொண்டு செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள சிஜி கார்ப் குளோபல் நிறுவனம், இந்தியாவில் ஒரு நிறுவனத்தை விரைவில் கைப்பற்ற முடிவு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் விநியோகம்
புதிதாக நிறுவனத்தைக் கைப்பற்றிய பின்பு சிஜி கார்ப் குளோபல் நிறுவனம் தனது முக்கியத் தயாரிப்புகளான சாஸ் மற்றும் இஸ்டென்ட் பாஸ்தா ஆகியவற்றை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வர்த்தகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இவ்விரு பொருட்களுக்கும் தலா 200 முதல் 250 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகச் சந்தை உள்ளது.
3வது இடத்தில் வாய் வாய் நூடுல்ஸ்
சிஜி கார்ப் குளோபல் நிறுவனம் உணவுப் பொருட்கள் மட்டும் அல்லாமல் கன்ஸ்யூமர் கூட்ஸ், பயோடெக், சிமெண்ட், எலக்ட்ரானிக்ஸ், அப்ளையன்ஸ், நிதியியல் சேவை எனப் பல துறையில் இயங்கி வருகிறது. இந்தியாவில் நூடுல்ஸ் விற்பனையில் நெஸ்லே, ஐடிசி நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக வாய் வாய் நூடுல்ஸ் பிராண்ட் தான் உள்ளது.
வட இந்தியப் பகுதி
தென்னிந்திய பகுதிகளில் வாய் வாய் நூடுல்ஸ் பிராண்ட் பெரிய அளவில் பிரபலம் இல்லை என்றாலும் வடகிழக்கு மற்றும் கிழக்கிந்தியப் பகுதிகளில் குறிப்பிடத்தக்கச் சந்தை வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
1500 கோடி ரூபாய் வருவாய்
தற்போது புதிய நிறுவனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் 2022ஆம் நிதியாண்டுக்குள் சிஜி புட்ஸ் நிறுவனத்தின் வருவாய் 1000 கோடி ரூபாயில் இருந்து 1500 கோடி ரூபாய் வரையில் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
விலை குறைவு
வாய் வாய் நூடுல்ஸ் பிராண்ட் கீழ் விலை குறைவான அதாவது 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையிலான உணவுப் பொருட்களின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.
வாடிக்கையாளர்கள்
மலிவான விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் காரணத்தால் அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களையும் பெற முடியும். மேலும் இந்நிறுவனம் அனைத்து தயாரிப்புகளையும் 100 ரூபாய்க்குக் கீழ் தான் விற்பனை செய்ய வேண்டும் எனவும் குறிக்கோள் வைத்துள்ளது.
புதிய உற்பத்தி தளம்
வாய் வாய் நூடுல்ஸ் பிராண்ட் சுமார் 200 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய உற்பத்தி தளத்தை உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் நிறுவ திட்டமிட்டுள்ளது.