கொரோனா பாதிப்பின் எதிரொலி உலகம் முழுவதும் இருக்கும் நிலையில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் நலன் கருதியும், கொரோனா பரவுவதையும் தடுக்கும் வகையில் நீண்ட விடுமுறை கொடுத்துள்ளனர். குறிப்பாக உற்பத்தி துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முழுமையான விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கான சம்பளத்தை நிறுத்தி வைத்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் தான் உலகின் முன்னணி உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே ஒரு கலக்கலான அறிவிப்பை வெளியிட்டு இந்நிறுவன ஊழியர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெஸ்லே
உலகின் முன்னணி உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே, வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா தாக்கத்தின் காரணமாகப் பணியில் இல்லாத ஊழியர்கள் அனைவருக்கும் அடுத்த 3 மாதத்திற்கு முழுச் சம்பளம் கொடுக்கப்படும். இதனால் ஊழியர்கள் அடுத்த 3 மாதத்திற்குப் பயம் இல்லாமல் இருக்கலாம் என நெஸ்லே தெரிவித்துள்ளது.
சம்பள உயர்வு
இதேபோல் கனடா தொழிற்சாலையிலும், விநியோக தளத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு மணிநேரத்திற்குக் கூடுதலாக 3 டாலர் கொடுக்கப்படும். இது மார்ச் 16ஆம் தேதியில் இருந்து கணக்கிடப்படும் என இந்தச் சுவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதோடு வீட்டில் இருந்து பணியாற்ற முடியாத கனடா தொழிற்சாலை ஊழியர்களுக்குப் போன்ஸ் தொகை கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும் நெஸ்லே நிறுவனத்தின் கனடா நாட்டின் ரீடைல் பிரிவு தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் இப்பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும் 8 வாரச் சம்பளம் கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
3 லட்சம் ஊழியர்கள்
இதைத் தாண்டி உலகளவில் கொரோனா தாக்கத்தால் பணிக்கு வர முடியாமல் பாதிக்கப்பட்டு இருக்கும் தனது 2,91,000 ஊழியர்களுக்கு (முழு நேர மற்றும் பகுதி நேர) 3 மாத சம்பளம் முழுமையாகக் கொடுக்கப்படும் எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 3 மாதத்திற்கு எவ்விதமான வருமான பாதிப்பு இல்லாமல் நெஸ்லே ஊழியர்கள் பணியாற்றலாம்.
சலுகை
இதுமட்டும் அல்லாமல் நெஸ்லே நிறுவனம், தங்களது ஊழியர்கள் நிதிநெருக்கடியில் இருந்தால் அவர்களுக்கு முன்கூட்டிய சம்பளம் அல்லது கடன் கொடுக்கும் நெஸ்லே சர்வதேச வர்த்தக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தச் சலுகை அனைவருக்கும் இருக்காது, உயர் பதவி அல்லது மேனேஜர் பதவிகளில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இருக்கும் எனத் தெரிகிறது.
நன்கொடை
மேலும் நெஸ்லே நிறுவனம் ரெட் கிராஸ் உடன் சேர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேவை அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக உணவு, தண்ணீர், மருந்து, ஊட்டச்சத்துப் பொருட்கள் ஆகியவை வழங்க முடிவு செய்துள்ளது. இதைத் தாண்டி சுமார் 10 பில்லியன் சுவிஸ் பிராங்க் தொகையை நன்கொடையாகக் கொடுப்பதாக அறிவித்துள்ளது.