பாஸ்வேர்டை நண்பர்களுக்கு பகிர்ந்தால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என நெட்பிளிக்ஸ் அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருவதோடு நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து வெளியேறிச் சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் பாஸ்வேர்டை பகிர்ந்தால் கட்டணம் என்ற நடவடிக்கை இந்தியாவில் இப்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓடிடி பிளாட்பார்ம்
இந்தியா உள்பட உலகம் முழுவதும் தற்போது ஓடிடி பிளாட்பார்ம் மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. திரையரங்குகளின் சென்று குடும்பத்தோடு திரைப்படம் பார்த்தால் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் செலவாகிறது என்பதால் வீட்டில் இருந்துகொண்டே ஓடிடியில் படம் பார்க்கும் வழக்கம் தற்போது பொது மக்களிடம் அதிகரித்து வருகிறது.
நெட்பிளிக்ஸ்
இதனால் ஓடிடி தளங்களும் போட்டி போட்டுக்கொண்டு புதிய திரைப்படங்களை வாங்கி தங்களது சந்தாதாரர்களுக்கு திருப்தி அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலகின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் திடீரென தங்களுடைய சந்தாதாரர்கள், நண்பர்களிடம் பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தாதாரர்கள் பலரும் சந்தாவை ரத்து செய்து வருவதாக கூறப்படுகிறது.
பாஸ்வேர்டு
கடந்த மார்ச் மாதம் பாஸ்வேர்டை பகிரும் பயனர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க உள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு செய்து இருந்தது. இது கொள்கை ரீதியான முடிவு என்றும், ஒரே பயனர் தங்களது பாஸ்வேர்டை பலரிடம் பகிராமல் இருப்பதற்காக செய்யப்படும் நடவடிக்கை என்று கூறப்பட்டது.
கூடுதல் கட்டணம்
ஆனால் இந்த அறிவிப்புக்கு பின்னரும் பயனர்கள் பலர் தங்களது பாஸ்வேர்டை நண்பர்களுக்கு பகிர்ந்து வந்தது நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு தெரியவந்தது. இதனை அடுத்து தங்களது பாஸ்வேர்டு விவரங்களை பகிரும் பயனர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது.
சோதனை முயற்சி
முதல் கட்டமாக பெரு, சிலி மற்றும் கோஸ்டாரிகா ஆகிய நாடுகளில் சோதனை முயற்சியாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் பாஸ்வேர்டை பகிரும் பயனர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலித்தது. ஒரு சிலருக்கு இது குறித்த எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமலேயே அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சந்தா ரத்து
இதனால் அதிர்ச்சி அடைந்த பலர் சந்தாவை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சோதனை முயற்சியிலேயே நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு ஒரு சில நாடுகளில் மட்டும் சோதனை முயற்சியாக இருக்கும் இந்த திட்டம் படிப்படியாக இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் விரைவில் கொண்டு வரப்படும் என நெட்பிளிக்ஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தியா
இந்தியாவில் இப்போதைக்கு பாஸ்வேர்டை பகிர்வதால் கட்டண வசூல் நடைமுறையில் இல்லை என்றாலும் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் உள்ள நெட்ப்ளிக்ஸ் பயனர்கள் பாஸ்வேர்டை பகிர்ந்தால் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.