அமெரிக்கக் கனவுடன் வாழும் பல கோடி இந்தியர்களுக்குத் தொடர்ந்து சோகத்தைக் கொடுத்து வரும் ஹெச்1பி விசா மாற்றங்களின் உச்சக்கட்டமாக, தற்போது டிரம்ப் அரசு அதிரடியாகப் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் அமெரிக்கச் சிலிக்கான் வேலியில் இருக்கும் நிறுவனங்கள் இனி வரும் காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து ஊழியர்களைப் பணியில் அமர்த்தும் முடிவையே கைவிடும் அளவிற்கு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இனி வரும் காலகட்டத்தில் ஹெச்1பி விசா பெறும் வெளிநாட்டு ஊழியர்கள் கிட்டத்தட்ட அமெரிக்கக் குடிமக்கள் வாங்கும் அதைச் சம்பளத்தைப் பெறும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது ஒருபக்கம் மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், மறுபுறம் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே வெளிநாட்டில் இருந்து குறைந்த சம்பளத்திற்கு ஊழியர்களைப் பணியில் அமர்த்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கர்களுக்கு இணையான சம்பளம் கொடுக்க வேண்டும் என்றால் அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்த கட்டாயம் தயங்கும்.
இதுதான் தற்போது நடந்துள்ளது.
புதிய மாற்றம்
ஹெச் 1பி விசா பெறும் வெளிநாட்டு ஊழியர்கள் பணியில் அமர்த்தும் போது, 4 சம்பள அளவுகளில் பல்வேறு துறை சார்ந்த பணியிடங்களில் அமர்த்தப்படுகின்றனர். இந்தச் சம்பள அளவீடுகள் தற்போது சில பிரிவுகளில் இரட்டிப்பு அளவிலும், சில பிரிவில் அமெரிக்கர்களின் சம்பள அளவீட்டுக்குக் கிட்டத்தட்ட இணையான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
- சம்பள அளவீடு 1 -ல் தற்போது அமெரிக்கர்கள் வாங்கும் சம்பளத்தில் 17 சதவீதம் சம்பளத்தில் பணியில் அமர்த்தப்படுகிறது. இது தற்போது 45 சதவீதமாக உயர்ந்துள்ளது.
- இதேபோல் 2வது சம்பள பிரிவில் 34 சதவீதமாக இருந்த அளவீடு 62 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- 3வது சம்பள பிரிவில் 50 சதவீதமாக இருந்த அளவீடு 78 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- 4வது சம்பள பிரிவில் 67 சதவீதமாக இருந்த அளவீடு தற்போது 95 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறப்பு வேலைகள்
இதேபோல் ஹெச் 1பி விசாவில் ‘speciality occupation' என்ற சிறப்பு வேலைகள் பிரிவுகளில் இருக்கும் படிப்பு மற்றும் பட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் சில பிரிவில் பட்டம் பெற்றுச் சிறந்து விளங்குவோருக்கு மட்டுமே ‘speciality occupation' பிரிவின் கீழ் ஹெச் 1பி விசா வழங்கப்படும் என விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட சில ஒப்பந்த பிரிவு ஊழியர்களுக்கு விசா காலம் குறைக்கப்பட்டுள்ளது.
ஆபத்து
ஹெச்1பி விசாக்களை அதிகளவில் நம்பி வர்த்தகம் செய்யும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே விசா தடையைச் சமாளிக்கப் பல்வேறு நடவடிக்கைகளையும், அமெரிக்காவில் தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் தேவையான நடவடிக்கைகளைக் கடந்த வருடத்தில் இருந்து எடுத்து வரும் காரணத்தால் இப்புதிய விதி மாற்றத்தால் தற்போது எவ்விதமான மாற்றமும் இல்லை.
ஆனால் அடுத்த சில வருடத்தில் இந்தப் புதிய விதியால் மிகப்பெரிய பாதிப்புகளை இந்திய நிறுவனங்கள் சந்திக்கும்.
அமெரிக்க நிறுவனங்கள்
அமெரிக்காவில் இருக்கும் இந்திய நிறுவனங்களுக்குத் தற்போது பிரச்சனை இல்லை என்றாலும், ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் வெளிநாட்டவர்களைப் பணியில் அமர்த்தும் கூகிள், ஆப்பிள், பேஸ்புக், போன்ற இதர பெரும் நிறுவனங்களுக்கு இந்த விதி பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தியர்கள்
இப்புதிய விதி மாற்றத்தால் அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் பாதிக்கும். ஆனால் தற்போது அமெரிக்காவில் இருக்கும் இந்திய ஊழியர்களுக்கும் பிற நாட்டு ஊழியர்களுக்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லை.
சொல்லப்போனால் அமெரிக்காவில் தற்போது பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் ஆகவே இருக்கும்.
டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது வெளியிட்டுள்ள விசா விதிமுறை மாற்றங்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகள் சென்றடையும். இதேபோல் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை வெளிநாட்டவர்கள் தட்டிப்பறிக்கும் நிலை இனி குறையும் என டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.
டிரம்ப் அரசு ஜூன் மாதம் ஹெச்-1பி, ஹெச்-2பி, எல்-1, ஜே-1 விசாக்களை டிசம்பர் 2020 வரையில் வழங்கத் தடைவிதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிபர் தேர்தல்
டிரம்ப் அரசு வெளியிட்டுள்ள இந்த விதி மாற்றங்கள் இந்தியா உட்பட உலக நாடுகளில் இருக்கும் இளைஞர்களைச் சோகத்தில் ஆழ்த்தியிருந்தாலும், இது நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தால் நிச்சயம் இந்த விதிமுறைகள் மாற்றப்படும் என நம்பிக்கையில் பலர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications